கல்லூரி 'கேட்'டை மூடி மாணவர்கள் போராட்டம்
சென்னை: சாலை விபத்தில் மாணவன் படுகாயம் அடையக் காரணமானதாக கூறி கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து, கல்லூரியின் கேட்டை மூடி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை மேடவாக்கம் அருகே உள்ளது பொன்மார். இங்கு பிரின்ஸ் வெங்கடேஸ்வரா பொறியியல் கல்லூரி உள்ளது. இந்தக் கல்லூரியில் 2வது ஆண்டு பிஇ (ஐடி) படித்து வருபவர் விஜய். இவரது வீடு ஆதம்பாக்கத்தில் உள்ளது.
சமீபத்தில் ஈவ் டீசிங்கில் ஈடுபட்டதற்காக விஜய் மீது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதன்படி 10 நாட்களுக்கு அவர் கல்லூரிப் பேருந்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் நகரப் பேருந்தில் கல்லூரிக்கு வந்து போய்க் கொண்டிருந்தார். இந்த நிலையில், நேற்று மாலை கல்லூரி முடிந்ததும் ராம்குமார் (28) என்பவரிடம் லிப்ட் கேட்டு அவரது மோட்டார் சைக்கிளில் பயணித்தார் விஜய்.
மேடவாக்கம் சந்திப்பு சாலையில் பைக் வந்தபோது எதிர்பாராதவிதமாக தடுமாறி விழுந்தது. இதில் ராம்குமார் தலையில் பலத்த அடிபட்டு அவர் உயிரிழந்தார்.
விஜய் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கல்லூரி நிர்வாகம் எடுத்த நடவடிக்கையால்தான் விஜய் கல்லூரிப் பேருந்தில் பயணிக்க முடியவில்லை. வேறு ஒருவரின் பைக்கில் சென்று விபத்துக்குள்ளாகி விட்டார் என்று கூறி கல்லூரி கேட்டை மூடி மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
பின்னர் போலீஸார் வரவழைக்கப்பட்டு மாணவர்கள் சமாதானப்படுத்தப்பட்டனர். அதன் பின்னரே மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.