எழுத்தாளர் சுஜாதா மரணம்
சில காலமாகவே சிறுநீரகக் கோளாரால் அவர் பாதிக்க்பபட்டிருந்தார். சமீபத்தி்ல உடல் நிலை மோசமானதால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9.30 மணியளவில் சுஜாதாவின் உயிர் பிரிந்தது.
ரங்கராஜன் என்ற இயற்பெயர் கொண்ட அவருக்கு, மனைவி சுஜாதா, அரங்கபிரசாத், கேசவ பிரசாத் என இரு மகன்கள் உள்ளனர். மகன்கள் இருவரும் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர்.
தந்தையின் உடல் நலக்குறைவைக் கேள்விப்பட்டதும் அவர்கள் சென்னை விரைந்தனர்.
சுஜாதாவின் இறுதிச் சடங்குகள் நாளை நடைபெறவுள்ளன.
சுஜாதாவின் இயற் பெயர் ரங்கராஜன். எழுத ஆரம்பித்தபோது புனை பெயருக்காக தனது மனைவி பெயரையே சூட்டிக் கொண்டார்.
சென்னை திருவல்லிக்கேணியில் 1935ம் ஆண்டு மே 3ம் தேதி பிறந்தார் சுஜாதா. அவரது தந்தை சீனிவாச ராகவன், தாயார் கண்ணம்மா. சுஜாதாவின் தந்தை மின்வாரியத்தில் வேலை பார்த்து வந்தார். அவருக்கு அடிக்கடி இடமாறுதல் ஏற்பட்டு வந்ததால், தந்தை வழி தாத்தாவின் ஊரான திருச்சி, ஸ்ரீரங்கத்தில் கொண்டு போய் விடப்பட்டார் சுஜாதா.
இளமைக் காலத்தை அங்குதான் சுஜாதா கழித்தார். அந்த அனுபவம் தான் பல்வேறு படைப்புகளை எதிர்காலத்தில் படைக்க அவருக்கு பேருதவியாக இருந்தது.
கலாமின் கிளாஸ்மேட்:
ஸ்ரீரங்கம் பாய்ஸ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த சுஜாதா, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் பிஎஸ்.சி (இயற்பியல்) படிப்பை முடித்தார். அவருடன் அப்போது அவருடன் படித்தவர்தான் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.
அதன் பின்னர் சென்னை வந்த சுஜாதா, குரோம்பேட்டை எம்.ஐ.டியில் பிஇ எலக்ட்ரானிக்ஸ் முடித்தார்.
அதன் பின்னர் மத்திய அரசுப் பணியில் சேர்ந்தார், டெல்லிதான் முதல் பணியிடம். 14 ஆண்டு அரசுப் பணியில் இருந்த சுஜாதா பின்னர் பெங்களூர் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் இணைந்தார். அங்கு ரேடார்கள் குறித்த ஆய்வுப் பிரிவிலும் மேலும் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். பின்னர் பொது மேலாளராக உயர்ந்தார்.
பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சென்னைக்குத் திரும்பி செட்டிலானார்.
அறிவியலை மீடியா மூலமாக மக்களிடம் கொண்டு சென்றதற்காக அவரைப் பாராட்டி தேசிய அறிவியல் தொழில்நுட்பக் கவுன்சில் அவருக்கு 1993ம் ஆண்டு விருது வழங்கிக் கெளரவித்தது.
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை இன்று நாம் பயன்படுத்த முக்கியக் காரணம் சுஜாதாதான். இதை உருவாக்கிய பாரத் எலெக்ட்ரானிக் டீமில் முக்கிய உறுப்பினராக இருந்தார் சுஜாதா.
இந்த எந்திரத்தை உருவாக்கியதற்காக அவருக்கு வாஸ்விக் விருது வழங்கப்பட்டது.
சுஜாதாவின் எழுத்துப் பணியையப் பாராட்டு அவருக்கு தமிழக அரசின் கலைமாமணி விருதும் வழங்கப்பட்டுள்ளது.
சுஜாதாவின் மகன் கேசவ பிரசாத், ஜப்பானைச் சேர்ந்த கே என்பவரை மணந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.