For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழர்களை இழுக்கும் மலேசிய காங்.

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்: படாவி அரசு மீது பெரும் அதிருப்தியுடன் இருக்கும் தமிழர்களின் வாக்குகளை சிந்தாமல், சிதறாமல் அப்படியே பெறும் தீவிர முயற்சியில் ஆளுங்கூட்டணியில் இடம் பெற்றுள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் இறங்கியுள்ளது.

மலாய் இனத்தவர்களுக்கு நிகராக தங்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பில் சம உரிமை வேண்டும் என்று கோரி மலேசிய தமிழர்கள், கடந்த ஆண்டு இறுதியிலிருந்து போராடி வருகின்றனர். கோலாலம்பூரில் நடந்த அமைதிப் போராட்டத்தை காவல்துறை இரும்புக் கரம் கொண்டு அடக்கியது.

போராட்டத்தில் கலந்து கொண்ட பலர் கைது செய்யபப்ட்டனர். போராட்டத்திற்கு ஏற்பாடு செய்த ஹிண்ட்ராப் அமைப்பின் நிர்வாகிகள் ஐந்து பேர் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விசாரணையே இல்லாமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் மார்ச் 8ம் தேதி மலேசியாவில் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதையடுத்து பிரதமர் படாவி தலைமையிலான அரசு தமிழர்களின் வாக்குகளை மனதில் கொண்டு பல்வேறு சமாதான நடவடிக்கைகளில் இறங்கியது.

மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான டத்தோ சாமிவேலு தலைமையில் இந்துக் கோவில்களுக்கு உதவுவதற்காகவும், அவற்றின் பிரச்சினைகளைக் களைவதற்காகவும் கமிட்டி அமைக்கப்பட்டது. தைப் பூசம் தேசிய விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

இப்படி அரசு சமாதான நடவடிக்கையில் ஈடுபட்டபோதிலும் கூட அரசின் மீதான தமிழர்களின் அதிருப்தி குறைந்ததாக தெரியவில்லை. இதையடுத்து மலேசிய இந்திய காங்கிரஸ் தமிழர்களின் வாக்குகளை அப்படியே பெறும் நோக்கில் தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.

அந்நாட்டு நாளிதழ்களில் தமிழர்களுக்காக முழுப் பக்க விளம்பரங்களை மலேசிய இந்திய காங்கிரஸ் கொடுத்துள்ளது. உங்கள் மீது மலேசிய இந்திய காங்கிரஸ் பரிவு காட்டுகிறது, கவலைப்படுகிறது என்ற தலைப்புடன் வெளியாகியுள்ள அந்த விளம்பரங்களில், தமிழர்கள் உள்ளிட்ட பூர்வீக இந்தியர்களின் காப்பாளர் மலேசிய இந்திய காங்கிரஸ்தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மலேசியவாழ் இந்தியர்களின் நலனுக்காக மலேசிய இந்திய காங்கிரல் மேற்கொண்ட பணிகள், மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் அதில் இடம் பெற்றுள்ளன.

போட்டியிடும் இடங்களில் வெற்றி பெற்று விட முடியும் என மலேசிய இந்திய காங்கிரஸ் நம்பிக்கையுடன் உள்ளது. இருந்தாலும் ஒரு சீட் கூட தேவையில்லாமல் இழந்து விடக் கூடாது என்பதிலும் அது கவனமாக இருக்கிறது. இதற்காகவே தமிழர்களின் நம்பிக்கையைப் பெறும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது அக்கட்சி.

ஆனால் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோலாலம்பூரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் கலந்து கொண்டு நடத்திய மிகப் பிரமாண்டமான பேரணி, டத்தோ சாமிவேலுவைக் குறி வைத்து நடத்தப்பட்ட போராட்டம் என்று தேர்தல் பார்வையாளர்கள் கூறுகிறார்கள்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக மலேசிய இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்து வருகிறார் சாமிவேலு. தற்போது சுங்கை சிபுத் எம்.பி தொகுதியில் அவர் போட்டியிடுகிறார். 9வது முறையாக அவர் எம்.பி. தேர்தலில் போட்டியிடுகிறார். படாவி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள ஒரே தமிழர் இவர் மட்டுமே.

சாமிவேலு மீது தமிழர்களில் பெரும்பாலானவர்கள் அதிருப்தியுடன் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்தத் தேர்தல் படாவிக்கு மட்டுமல்ல, சாமிவேலுவுக்கும் கூட முக்கியமானது என்பதால் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் மலேசிய இந்திய காங்கிரஸ் உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X