சிபிஎஸ்இ தேர்வுகள் தொடக்கம்-சென்னையில் 72 மையங்கள்
டெல்லி: 10 மற்றும் 12ம் வகுப்புக்கான சிபிஎஸ்இ பாடத் திட்ட பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கின. சென்னையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
மத்திய செகண்டரி கல்வி வாரியத்தின் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று முதல் தொடங்கின. நாடு முழுவதும் மொத்தம் 13.13 லட்சம் மாணவ, மாணவியர் தேர்வில் கலந்து கொண்டுள்ளனர்.
மொத்தம் 5018 தேர்வு மையங்கள் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 375 மையங்களில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
டெல்லியில் மட்டும் 1109 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கண் பார்வையற்றவர்கள், மாற்றுத் திறன் உடையவர்கள், உடல் ஊனமுற்றோர் ஆகிய சிறப்புப் பிரிவின் கீழ், 10ம் வகுப்பில் 2478 பேரும், 12ம் வகுப்பில் 2132 பேரும் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னையில், இந்த ஆண்டு 5000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். இவர்களுக்காக 72 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆண்டு முதல் புதிய முறையில் வினாத்தாள் வடிவமைக்கப்பட்டுள்ளது. மொத்த கேள்விகளில் 20 சதவீத கேள்விகள், சிந்தித்து எழுதும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. அதாவது மக்கப் செய்து வந்து தேர்வு எழுத முடியாத அளவுக்கு இவை சிந்தித்து எழுதும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகளில் 10 சதவீதம், குறுகிய விடைகளை அளிக்கும் வகையிலான கேள்விகளாக இருக்கும்.
10ம் வகுப்பு தேர்வுகள் மார்ச் 27ம் தேதி முடிகிறது, ஏப்ரல் 2ம் தேதி 12ம் தேதி தேர்வுகள் முடிகின்றன.
ஐக்கிய அரபு எமிரேட்சில்..
அதே போல துபாய் உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலும் உள்ள சுமார் 110 இந்தியப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் இந்தத் தேர்வை இன்று முதல் எழுதுகின்றனர்.
யுஏஇயில் மட்டும் 52 பள்ளிகள் உள்ளனர். இங்கு 2,200 மாணவ, மாணவிகள் பயில்வது குறிப்பிடத்தக்கது.