ஓகேனக்கல்: கோர்ட்டுக்கு போகும் கர்நாடகம்
பெங்களூர்: தமிழகத்தின் கனவுத் திட்டமான ஓகேனக்கல் குடிநீர்த் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட திட்டம்தான் ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம். அப்போதைய ஒருங்கிணைந்த தர்மபுரி மாவட்டத்திற்கென இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இங்கிருந்து சென்னைக்கும் குடிநீர் கொண்டு வர அப்போது யோசிக்கப்பட்டிருந்தது.
ஆனால் கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கும் மேலாக வெறும் கனவாகவே இருந்து வந்த இந்தத் திட்டம் தற்போதுதான் நனவாகியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்தத் திட்டத்திற்கு தர்மபுரியில் முதல்வர் கருணாநிதி அடிக்கல் நாட்டி வைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களைச் சேர்ந்த 30 லட்சம் பேர் பலன் அடைவார்கள்.
இந்த நிலையில் இத்திட்டத்திற்கு கர்நாடக அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாகவும் அது கூறியுள்ளது.
இதுகுறித்து கர்நாடக அரசின் தலைமைச் செயலாளர் சுதாகர் ராவ் செய்தியாளர்களிடம் கூறுகையில், கர்நாடகத்தின் சாம்ராஜ் நகர் மாவட்டத்தின் எல்லையில் உள்ள ஓகேனக்கல் அருவிப் பகுதியில் தமிழக அரசு புதிய குடிநீர்த் திட்டத்தை அமல்படுத்தவுள்ளது.
இந்தத் திட்டம் சர்ச்சைக்குரிய பகுதியில் (ஓகேனக்கலையே தனக்குச் சொந்தமானது என்று கர்நாடகம் கூறி வருவது நினைவிருக்கலாம்) நிறைவேற்றப்படுவது குறித்து நாங்கள் எங்களது ஆட்சேபனையை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளோம்.
திட்டம் அமலுக்கு வரும் ஓகேனக்கல் பகுதி கர்நாடகத்திற்குச் சொந்தமானது. மேலும் காவிரி ஆற்று நீர் பங்கீட்டு ஒப்பந்தத்திற்கு புறம்பானதாகும்.
மத்திய அரசிடமிருந்து வரும் பதிலைப் பொறுத்து உச்சநீதிமன்றத்தை அணுக நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.
இதுதொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்துள்ளோம். தமிழக அரசுக்கும் இத்திட்டத்தை நிறைவேற்றக் கூடாது என்று கோரி கடிதம் எழுதியுள்ளோம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்து வழக்கு நிலுவையில் உள்ளதையும் தமிழக அரசுக்கு சுட்டிக் காட்டியுள்ளோம் என்றார்.