திருச்சி மாநகராட்சியின் பற்றாக்குறை பட்ஜெட் தாக்கல்
திருச்சி மாநகராட்சியில் நேற்று ரூ. 18.92 கோடி பற்றாக்குறை பட்ஜெட்டை மாநகராட்சி மேயர் சாருபாலா தொண்டமான் தாக்கல் செய்தார்.
2008-09ம் ஆண்டுக்கான நிதி வருவாய் ரூ. 100.25 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. செலவு ரூ. 119.17 கோடியாக இருக்கும். பற்றாக்குறை ரூ. 18.92 கோடியாகும்.
திருச்சியில் நவீன கழிவு நீர் சுத்திகரிப்பு திட்டத்தை அமல்படுத்துவது, பள்ளி மாணவர்களுக்காக இன்டர்நெட் வசதியுடன் கூடிய நூலகங்களை ஏற்படுத்துவது, காஸ் மூலம் பிணங்களை எரியூட்டக் கூடிய வசதியுடனான அதி நவீன மயானம் உள்ளிட்டவை பட்ஜெட் அறிவிப்பில் இடம் பெற்றுள்ளது.
ஜப்பான் வங்கியின் நிதியுதவியுடன் அமல்படுத்தப்படவுள்ள குடிநீர் திட்டத்திற்கு மாநகராட்சியின் சார்பில் ரூ. 24.82 கோடி செலவிடப்படவுள்ளது. இந்தத் திட்டம் ரூ. 144.86 கோடி செலவில் நிறைவேற்றப்படவுள்ளது.
ரூ. 61.18 கோடி செலவில் 107.28 கிலோமீட்டர் சாலைகள் மேம்படுத்தப்படும்.
மணல்வாரித்துறையில் ரூ. 70 லட்சம் செலவில் 3வது மயானம் அமைக்கப்படும். இந்த செலவில் மாநகராட்சியின் பங்கு ரூ. 50 லட்சமாகும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.