தமிழர்களைக் கவர எம்ஜிஆர் பாட்டை போட்டு பிரசாரம்!
கோலாலம்பூர்: மலேசிய தமிழர்களின் வாக்குகளைக் கவர எம்.ஜி.ஆர் படப் பாடல்களை தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் சாதுரியமாக ஓட்டு வேட்டையாடி வருகின்றன. இதனால் ஆளுங்கூட்டணி பெரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளது.
மலேசியாவில் வருகிற 8ம் தேதி நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் ஆளும் கூட்டணிக்கு இந்திய வம்சாவளியினரின் ஓட்டுக்கள் கிடைக்காது என்று பரவலாக கருதப்படுகிறது.
பிரசாரத்தில் எம்.ஜி.ஆர் பாட்டு:
ஆளுங்கூட்டணி மீதான தமிழர்களின் அதிருப்தியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள எதிர்க்கட்சிக் கூட்டணி தீவிரமாக முயன்று வருகிறது. இதற்காக அது பழைய எம்.ஜி.ஆர். படப் பாடல்களை பிரசாரத்தில் ஒலிக்க விட்டு தமிழர்களை ஈர்த்து வருகிறது.
தங்களது தேர்தல் பிரசாரங்களில் எம்.ஜி.ஆர். படப் பாடல்களை ஒலிக்க விட்டு தமிழர்களைக் கவர்ந்து வருகிறது. எதிர்க்கட்சியினரின் இந்தப் பிரசாரம் தமிழர்களிடையே செமத்தியான வரவேற்பைப் பெற்றுள்ளது.
நம் மீது எதிர்க்கட்சியினர் பற்றுடன் உள்ளனர் என்ற எண்ணத்தை அது தமிழர்களிடையே பரப்பி வருகிறது.
எதிர்க்கட்சிகளின் இந்த எம்.ஜி.ஆர். பாட்டுப் பிரசாரம் ஆளுங்கட்சியை மட்டுமல்லாமல், ஆளுங்கட்சிக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள மலேசிய இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
ஆளுங்கட்சியின் எச்சரிக்கை:
இந்த நிலையில் துணை பிரதமர் நஜீப் ரஸ்ஸாக் இந்திய வம்சாவளியினருக்கு குறிப்பாக தமிழர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.
இந்திய வம்சாவளியினரின் கூட்டம் ஒன்றில் அவர் பேசுகையில், பாரிசன் தேசிய கூட்டணி வேட்பாளர்களுக்கே இந்திய வம்சாவளியினர் ஓட்டுப் போட வேண்டும். அப்போதுதான் அவர்களுக்கு அரசில் பிரதிநிதித்துவம் கிடைக்கும்.
நாடாளுமன்றத்திலும், சட்டசபைகளிலும் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்காவிட்டால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும். தங்களது உரிமைகளுக்காக குரல் கொடுக்க முடியாத நிலை ஏற்படும்.
அந்த நிலையைத் தவிர்க்க வேண்டுமானால் எதிர்க்கட்சிகளுக்கு தமிழர்கள் வாக்களிப்பதைத் தவிர்க்க வேண்டும். ஆளுங்கட்சிக்கே வாக்களிக்க முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் அவர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும் என்றார் அவர்.
மலேசியாவில் உள்ள 2.7 கோடி மக்கள் தொகையில் இந்தியர்களின் எண்ணிக்கை 7.87 சதவீதம் ஆகும். இவர்களில் முக்கால்வாசிப் பேர் ஆளுங்கூட்டணி மீது கடும் அதிருப்தியுடன் உள்ளனர். தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்தியதை படாவி அரசு இரும்புக் கரம் கொண்டு அடக்கியது தமிழர்களை பெரும் கோபத்திலும், அதிருப்தியிலும் ஆழ்த்தியுள்ளது.
மேலும் தமிழர்களின் உரிமைகளுக்காக போராட்டங்களை ஏற்பாடு செய்த ஹிண்ட்ராப் அமைப்பின் நிர்வாகிகள் ஐந்து பேரை உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ததை தமிழர்கள் ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.