கட்டாய மருத்துவ சேவை-சாம்பசிவ ராவ் கமிட்டி அறிக்கை தாக்கல்
சென்னை: கட்டாய கிராமப்புற மருத்துவ சேவை குறித்து ஆராய நியமிக்கப்பட்ட டாக்டர் சாம்பசிவ ராவ் கமிட்டியின் அறிக்கை, மத்திய அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
மருத்துவ மாணவர்கள் கடைசி ஒரு வருடத்திற்கு கட்டாயம் கிராமங்களில் சேவையாற்ற வேண்டும் என்ற பரிந்துரையை மத்திய சுகாதாரத் துறை சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தது. இதற்கு மருத்துவ மாணவர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். தமிழகத்தில்தான் இந்தப் போராட்டம் பெரிய அளவில் நடந்தது.
பின்னர் இதுகுறித்து ஆராய டாக்டர் சாம்பசிவ ராவ் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி தற்போது தனது ஆய்வறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
இதுகுறித்து அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில், சாம்பசிவ ராவ் கமிட்டி தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இதை சுகாதார அமைச்சகம் தீவிரமாக ஆராய்ந்து, அடுத்த சில வாரங்களில் முடிவு எடுக்கப்படும்.
கமிட்டியின் பரிந்துரைகள் என்ன என்பதை இப்போது கூறுவதற்கில்லை. பின்னர் அது விரிவாக தெரிவிக்கப்படும் என்றார் அவர்.