சேது: மத்திய அரசு தயங்கினால் தமிழகமே நிறைவேற்ற வேண்டும்- பழ.நெடுமாறன்
திருச்சி: சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற தயங்கினால் மாநில அரசே அதை நிறைவேற்ற வேண்டும் என தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார்.
திருச்சியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
மத்திய அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ரூ.60,000 கோடி ரூபாய் வரை கடனை ரத்து செய்தது பாராட்டத்தக்கது.
அகிம்சைவாதியான மகாத்மா காந்தியை தேசத் தந்தையாக ஏற்றுக்கொண்ட நம் நாட்டில் ராணுவ செலவுக்கு ஆண்டுக்கு ஆண்டு நிதி ஒதுக்குவதை அதிகரித்து கொண்டே போவது தவறான முன் உதாரணம். இந்தப் பணத்தை மக்கள் நல்வாழ்வு திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும்.
இலங்கை தமிழர்களுக்கு செஞ்சிலுவை சங்கம் மூலமாக அனுப்புவதற்காக சேகரிக்கப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் மருந்து பொருட்களில் பாதி பொருட்கள் வீணாகிவிட்டன. இதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றிணைத்து போராட்டம் நடத்துவோம்.
தமிழகத்தில் 250 ஆண்டுகளாக பேசப்பட்டு வரும் திட்டம் சேது சமுத்திர திட்டம். மதரீதியான காரணங்களை சொல்லி அதை தடுக்க முனைவது சரியல்ல. ஏற்கனவே 60 சதவீத பணிகள் முடிந்துவிட்ட நிலையில் அந்த திட்டத்தை தாமதப்படுத்துவது திட்டத்திற்காக இதுவரை செலவழித்த பணத்தை வீணடிப்பதற்கு சமம்.
சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு நிறைவேற்ற தயங்கினால் மாநில அரசே அதை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
திமுக, அதிமுக அல்லாத மூன்றாவது அணி உருவாக வேண்டும் என்றார் நெடுமாறன்.