அணு ஒப்பந்தம்-இடதுசாரிகளுடன் இறுதி மோதலுக்கு தயாராகும் காங்.
அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்திற்கு இடதுசாரிகள் கடு் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து இந்த விஷயத்தில் மத்திய அரசு வேகம் காட்டாமல் இருந்து வந்தது.
ஆனால், நிதியமைச்சர் ப.சிதம்பரம் உதவியோடு இப்போது தேர்தல் பட்ஜெட்டை போட்டுவிட்டு, தேர்தலுக்கு தயாராக ஆரம்பித்துவிட்டது காங்கிரஸ்.
இந் நிலையில் இன்று நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் பிரணாப் முகர்ஜி அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி அமைப்புடனான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும். இந்த விஷயத்தில் அனைத்துக் கட்சிகளின் ஒருமித்த கருத்தை எட்ட அரசு முயலும்.
கடந்த 30 வருடங்களாக அணு சக்தித்துறையில் சர்வதேச அளவில் இந்தியா தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலை தொடரக் கூடாது. இதற்கு இந்த ஒப்பந்தத்தை அமல்படுத்துவது மிக அவசியம்.
பாகிஸ்தானில் புதிதாக பொறுப்பேற்கும் அரசுடன் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தையை துவக்க இந்தியா தயாராக உள்ளது.
இலங்கை இனப்பிரச்சனைக்கு ராணுவம் மூலம் தீர்வு காணமுடியாது. அருணாச்சல பிரதேச மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இதை சீனாவுக்கு மத்திய அரசு தெளிவுபடுத்திவிட்டது என்றார் பிரணாப்.
நாளை இந்தியா-அமெரிக்கா முக்கிய ஆலோசனை:
இந் நிலையில் அணு ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்காவுடன் நாளை மத்திய அரசு முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளது. இந்தியா வரும் அமெரிக்க துணை வெளியுறவு அமைச்சர் ரிச்சர்ட் பெளசருடன் வெளியுறவுத்துறை கூடுதல் செயலாளர் காயத்ரி குமார் தலைமையிலான அதிகாரிகள் பேச்சு நடத்தவுள்ளனர்.
இதன் மூலம் இடதுசாரிகளின் எதிர்ப்பை காங்கிரஸ் புறம் தள்ள ஆரம்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஆதரவை இடதுசாரிகள் வாபஸ் பெற்றாலும் பரவாயில்லை, தேர்தல் சந்திக்கலாம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்துவிட்டது.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்த ஒப்பந்தத்தை மத்திய அரசு அமலாக்கக் கூடாது. மீறினால் விளைவுகளை சந்திக்க வேண்டியது தான் என்றார்.
நாடாளுமன்றம் ஒத்திவைப்பு:
முன்னதாக இன்று லோக்சபாவில் மும்பையில் வட மாநிலத்தவர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விவகாரம் கிளப்பப்பட்டது. இதையடுத்து பிகார், உத்தரப் பிரதேச எம்பிக்கள் அமளியில் ஈடுபட்டதால் அவை பகல் 2 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டது.