மேகாலயாவில் சட்டப் பேரவைத் தேர்தல்
மொத்தமுள்ள 60 சட்டப் பேரவை தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது. மாநிலம் முழுவதுமே கடும் குளிர் வாட்டி வருவதால் வாக்குப் பதிவு மந்தமாகவே இருந்தது. ஒரு தொகுதியில் வேட்பாளர் இறந்ததால் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டுள்ளது.
இம் மாநிலத்தில் மொத்தம் 12 லட்சம் வாக்காளர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மொத்தம் 331 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 19 பேர் பெண்கள்.
காங்கிரசுக்கும் ஐக்கிய ஜனநாயகக் கட்சிக்கும் இடையில் தான் நேரடி போட்டி நிலவுகிறது. வரும் 7ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
தேர்தலையொட்டி மேகாலயா-வங்க தேச எல்லை உள்பட அனைத்துப் பகுதிகளிலும் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பார்வையற்றவர்கள் வாக்களிக்கும் வகையில் பிரெய்லி ரக ஓட்டுப் பதிவு எந்திரங்களை இந்தத் தேர்தலில் தேர்தல் ஆணையம் அறிமுகப்படுத்தியது.
மேலும் ஊனமுற்றோர் வீல் சேரில் வந்து வாக்களிக்க வாக்குச் சாவடிகளில் சாய்வுப் பாதைகளும் அமைக்கப்பட்டிருந்தன.