For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

4 டிஆர்எஸ் எம்பிக்கள் ராஜினாமா-எம்எல்ஏக்களும் விலகுகின்றனர்

By Staff
Google Oneindia Tamil News

Andhra Pradesh Map
டெல்லி: தனி தெலுங்கான மாநில கோரிக்கையை வலியுறுத்தி தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியைச் சேர்ந்த 4 எம்பிக்களும் இன்று தங்கள் பதவியை ராஜினாமா செய்து சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜியிடம் கடிதம் தந்தனர்.

அதே போல எம்எல்ஏக்கள் 16 பேரும், 13 எம்எல்சிக்களும் ராஜினாமா செய்யவுள்ளனர்.

ஆந்திர மாநிலத்தை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் உருவாக்க வேண்டும் என்று பல்லாண்டுகளாக போராட்டங்கள் நடந்து வருகின்றன.

இதற்கு தெலுங்கானா பகுதி மக்களின் ஆதரவும் உள்ளது. கடந்த மக்களவை-ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் இந்தக் கோரிக்கையை முன் வைத்து தேர்தலில் போட்டியிட்ட தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதி தான் இந்தப் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

இதையடுத்து தனித் தெலுங்கானாவை உருவாக்குவதாகக் கூறி இந்தக் கட்சியின் ஆதரவைப் பெற்றது காங்கிரஸ். மத்தியி்ல் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அமர இந்தக் கட்சியின் ஆதரவும் முக்கிய காரணமாக அமைந்தது.

ஆனால், நம்ப வைத்து ஏமாற்றுவதற்கு பேர் போன காங்கிரஸ் இந்தக் கோரிக்கையை மறந்துவிட்டது. இந்தக் கோரிக்கையை முன் வைத்து தெலுங்கான ராஷ்ட்ரீய சமிதியின் தலைவர் சந்திரசேகர் ராவ் பல போராட்டங்களை நடத்தினார். தனது மத்திய அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

பின்னர் தனது கரீம் நகர் எம்.பி. பதவியையும் ராஜினாமா செய்தார். இதையடுத்து நடந்த இடைத்தேர்தலில் தனி மாநில கோரிக்கையை முன்வைத்து அதே தொகுதியில் போட்டியிட்டு மீண்டும் எம்.பியானார்.

இந் நிலையில் மார்ச் 6-ந்தேதிக்குள் தனி மாநிலம் அமைப்பதற்கான நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் கட்சி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்வார்கள் என எச்சரிக்கை விடுத்தார்.

இந்தக் கோரிக்கைக்கு மக்களிடையே பெரும் ஆதரவு இருப்பதால் பாஜகவும் தனி தெலுற்கானாவை ஏற்க ஆரம்பித்துள்ளது.

ஆனால், காங்கிரஸ் தொடர்ந்து அமைதி காத்து வருவதால் இன்று ராஷ்ட்ரீய சமிதி எம்.பிக்கள் சந்திரசேகர் ராவ், வினோத் குமார், ரவீந்திர நாயக், மதுசூதன் ரெட்டி ஆகியோர் கூண்டோடு ராஜினாமா செய்தனர்.

முன்னதாக அவர்கள் இன்று காலை நாடாளுமன்றத்தி்ல் இந்த பிரச்சனை குறித்து பேச முயன்றனர். அதற்கு சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அனுமதி கொடுக்கவில்லை. இதையடுத்து அவையின் மையப் பகுதிக்குச் சென்று சபாநாயகருடன்ம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவர்கள் வாதத்தை ஏற்க மறுத்த சோம்நாத் சட்டர்ஜி, நீங்கள் பேசியது எதுவும் சபை குறிப்பில் இடம் பெறாது. நீங்கள் எதை பேசுவதாக இருந்தாலும் உங்கள் இருக்கைக்கு சென்று பேசுங்கள் என்றார்.

இதையடுத்து இருக்கைக்கு திரும்பிய தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி எம்.பிக்கள், தனி தெலுங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி எம்.பி. பதவியை ராஜினாமா செய்கிறோம் என்று கூறிவிட்டு சபாநாகரிடம் தங்களது ராஜினாமா கடிதங்களைக் கெடுத்துவிட்டு அவையை விட்டு வெளியேறினர்.

அதே போல ஆந்திர சட்டசபையில் அந்த கட்சியின் எம்.எல்.ஏக்கள் 16 பேரும் நாளை ராஜினாமா செய்கின்றனர்.

சட்ட மேலவையி்ல் உள்ள எம்.எல்.சிக்கள் 3 பேரும் நாளை மறுதினம் ராஜினாமா செய்கின்றனர்.

தெலுங்கானா மாநில கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கூட்டணி அமைத்த காங்கிரஸ் தலைவர் சோனியா, தேர்தலில் வெற்றி பெற்றதும் கோரிக்கையை நிறைவேற்ற தவறிவிட்டார் என்று சந்திரசேகர் ராவ் குற்றம் சாட்டியுள்ளார்.

தெலுங்கானா கோரிக்கையில் உண்மையிலேயே நம்பிக்கை வைத்திருக்கும் மற்ற கட்சிகளைச் சேர்ந்த, குறிப்பாக காங்கிரஸ் எம்.எல்.ஏக்களும் ராஜினாமா செய்ய வேண்டும் என ராவ் கோரியுள்ளார்.

கடந்த தேர்தலின் போது தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சி சார்பில் போட்டியிட்ட 5 பேர் வென்றனர். இதில் நரேந்திரா என்ற எம்.பி. போலி பாஸ்போர்ட் வழக்கில் சிக்கியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து அவர் பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து விட்டார்.

ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி சார்பில் 26 பேர் எம்.எல்.ஏக்களாக தேர்வாயினர். இவர்களில் 10 எம்.எல்.ஏக்கள் சந்திரசேகர் ராவின் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் நேற்று நடந்த பேரணியில் அந்த 10 எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்கவில்லை. அவர்கள் எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X