ஏடிஎம் மையத்தில் சிக்கித் தவித்த மாணவர்
கல்லூரி மாணவரான பிரேம்நாத் என்பவர், சைதாப்பேட்டையில் உள்ள கனரா வங்கி கிளையில் உள்ள ஏ.டி.எம். மையத்திற்குப் பணம் எடுக்க நேற்று காலை சென்றார்.
பணம் எடுத்து விட்டு வெளியே வர அவர் முயன்றபோது மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால் அந்தத் தானியங்கிக் கதவு திறக்கவில்லை. பலமுறை திறக்கப் போராடியும் முடியாததால் தனது செல்போன் மூலம் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார் பிரேம்நாத்.
இதையடுத்து தீயணைப்புப் படையினருடன் போலீஸார் விரைந்து வந்தனர். தீயணைப்புப் படையினர் வந்து கதவைத் திறக்க முயற்சித்தனர். ஆனால் முடியவில்லை.
இதையடுத்து வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். கிட்டத்தட்ட 6 மணி நேரம் நடந்த போராட்டத்துக்குப் பின்னர், கதவின் பிரேமை
உடைத்து பிரேம்நாத்தை மீட்டனர்.
அந்த ஏடிஎம் மையத்தில், வங்கியின் சார்பில் காவலாளிகள் யாரும் பணியில் இல்லை என்று தெரிகிறது. ஆனால் நேற்றைய சம்பவத்தைத் தொடர்ந்து காவலாளிகள் நியமிக்கப்படுவர் என்று வங்கி நிர்வாகம் தெரிவித்தது.