இலங்கை, மலேசியத் தமிழர்கள் நிலை: இந்தியா கவலை
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் இதுகுறித்து அவர் பேசினார். பிரணாப் கூறுகையில், இலங்கைத் தமிழர்கள் மற்றும் மலேசியத் தமிழர்களின் நலன் குறித்து இந்தியா தீவிர அக்கறை கொண்டுள்ளது. குறிப்பாக இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் இந்தியாவுக்கு கவலை தருகிறது.
இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வு சரிவராது. அதில் வெற்றியும் கிடைக்காது. அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி, தீர்வு காண இரு தரப்பும் முயல வேண்டும், முன்வர வேண்டும்.
ஒருங்கிணைந்து இலங்கை என்ற அடிப்படையின் கீழ் தமிழர்கள் உள்பட அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக் கொள்ளக் கூடிய வகையிலான தீர்வு காணப்பட வேண்டும்.
இலங்கையில் சமீப காலமாக அதிகரித்து வரும் மோதல்கள் கவலை தருவதாக உள்ளது. நிலைமையை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இலங்கை அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசு முன்வந்திருப்பது வரவேற்புக்குரியது. இதன் மூலம் தமிழர்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சுயாட்சி வழங்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இந்திய மீனவர்கள் சர்வதேச கடல் எல்லையைத் தாண்டக் கூடாது. மதிக்க வேண்டும். இதை தாண்டிச் செல்லும்போதுதான் இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்துவது நடக்கிறது. இதுதொடர்பாக நிதானத்துடன் நடந்து கொள்ளும்படி இலங்கை அரசை மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
மலேசியில் இந்து உரிமைகளுக்கான நடவடிக்கைக் குழு (ஹிண்ட்ராப்) நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் மீது அந்த நாட்டு அரசு அடக்குமுறையைக் கையாளுவதாக பல்வேறு எம்.பிக்கள் இங்கு கவலை தெரிவித்தனர்.
இந்திய வம்சவாளியினர் எங்கு வசித்தாலும், அவர்களின் நலன் குறித்து இந்திய அரசு கவலைப்படுகிறது, அக்கறை கொள்கிறது. மலேசிய விவகாரத்திற்கும் அது பொருந்தும் என்றார் பிரணாப் முகர்ஜி.