அதிக கட்டணம் கேட்டால் ஆட்டோ ஏலம்: நேரு எச்சரி்க்கை
சென்னை: அதிக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோக்கள், உரிய ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்களை கைப்பற்றி ஏலம் விடுவோம் என போக்குவரத்துத்துறை அமைச்சர் கே.என்.நேரு ஆட்டோ ஓட்டுனர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாட்டு ஆட்டோ மற்றும் வாடகை ஊர்தி ஓட்டுனர் நல வாரியத்தின் இரண்டாவது கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் நேரு பேசுகையி்ல்,
சென்னையி்ல் சுமார் 15,000 ஆட்டோக்கள் லைசென்ஸ் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கின்றன. இது தொர்பாக பல முறை எச்சரித்துவிட்டோம்.
விரைவில் 500 போக்குவரத்துத்துறை அதிகாரிகளைக் கொண்டு ஒரே நாளில் 40,000 ஆட்டோக்களை சோதனையிட உள்ளோம். அன்று உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் கைப்பற்றப்படும்.
அவற்றை திருப்பித் தரவே மாட்டோம். அப்படியே ஏலம் விடுவோம். இதை நிச்சயமாக செய்வோம்.
லைசென்ஸ், உரிமம் உள்ளிட்ட ஆவணங்களைப் பெற இரு மாத அவகாசம் தருகிறேன். அதற்குள் தவறுகளை சரி செய்துவிடுங்கள். இல்லாவிட்டால் ஏலம் நிச்சயம்.
சென்னை நகரின் விரிவுபடு்த்தப்பட்ட பகுதிகளுக்கு மேலும் 5,000 பஸ்களை இயக்குமாறு பெருநகர வளர்ச்சிக் குழுமமான சிஎம்டிஏ கோரியுள்ளது. இதை ஏற்று இப்போது 3,600 பஸ்களை இயக்கி வருகிறோம்.
ஆட்டோ கட்டணத்தை குறைவாக வாங்கினால் பஸ்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க மாட்டோம். இல்லாவிட்டால் 'பீடர் சர்வீ்ஸ்' மூலம் சென்னையில் பஸ்கள் எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்திவிடுவோம்.
பெருநகரங்களை ஒழுங்குபடுத்தும் குழு சமீபத்தில், சென்னை உள்பட நாட்டின் பெரிய நகரங்களில் ஆட்டோக்களையே தடை செய்ய வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.
இதையெல்லாம் மனதில் வைத்து பொது மக்களிடம் ஆட்டோ ஓட்டுனர்கள் முறையாக நடந்து கொள்ள வேண்டும். சரியான கட்டணம் வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் கேட்டு அவர்களை நச்சரிப்பதோ, தொல்லையோ தருவதோ கூடாது என்றார் நேரு.