சேது சமுத்திர திட்டம்: ஏப். 15ல் உச்சநீதிமன்றம் விசாரணை
டெல்லி: சேது சமுத்திரத் திட்டம் தொடர்பான வழக்கு ஏப்ரல் 15ம் தேதி விசாரிக்கப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் இதுகுறித்துத் தெரிவிக்கையில், சேது சமுத்திரத்தை எதிர்த்துத் தொடரப்பட்டுள்ள மனுக்கள் ஏப்ரல் 15ம் தேதி விசாரிக்கப்படும்.
அன்றைக்குள், மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிப்போர் தங்களது மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும்.
ஏப்ரல் 15ம் தேதி இந்த மனுக்கள் விசாரணைக்கு வரும்போது, மேல் விசாரணை குறித்த தேதி அன்றைய தினம் முடிவு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய பதில் மனுவில், சேது சமுத்திரத் திட்டம் தற்போதைய பாதையிலேயே செயல்படுத்தப்படும். ராமர் பாலம் மனிதர்களால் கட்டப்பட்டது என்பதற்கு அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.