பட்ஜெட்-தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஸ்டிரைக்
கோவில்பட்டி: மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு எந்தவித சலுகைகளும் அறிவிக்காததை கண்டித்து தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் 10ம் தேதி வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.
லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு அளி்த்து வரும் தீப்பெட்டி தொழிலை பாதுகாக்கவும், இத்தொழில் தொடர்ந்து நடைபெற தீப்பெட்டி ஏற்றுமதிக்கான ஊக்கத் தொகையை 7 சதவீதத்தில் இருந்து 25 ஆக உயர்த்த கோரியும்,
பகுதி இயந்திர தீப்பெட்டி மீதான மத்திய கலால் வரி 12 சதவீதத்தை நீக்க வேண்டும் என்றும் கோரி தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் சார்பில் தமிழக அரசுக்கு மனு அனுப்பப்பட்டது.
இது தொடர்பாக மத்திய அரசிடம் பரிந்துரை செய்ய வேண்டும் என்றும் மாநில அரசுக்கு இந்த சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தீப்பெட்டித் தொழிலுக்கு எந்தவித சலுகைகளும் இடம் பெறாததால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
இதை கண்டித்து வரும் 10ம் தேதி அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அறிவித்துள்ளனர்.