மீனவர் கிறிஸ்டி உடல் அடக்கம் - ராமேஸ்வரத்தில் கனத்த அமைதி
ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட மீனவர் கிறிஸ்டியின் உடல் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அடக்கம் செய்யப்பட்டது. ராமேஸ்வரம், மண்டபம், தங்கச்சி மடம், அக்காள் மடம் உள்ளிட்ட பகுதிகளில் பெருத்த அமைதி நிலவுகிறது. மீனவர்கள் பெரும் கொந்தளிப்புடன் காணப்படுகின்றனர்.
நேற்று கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற தமிழக மீனவர்கள் மீது இலங்கை படையினர் இரு இடங்களில் துப்பாக்கிளால் சுட்டனர். இதில் கிறிஸ்டி என்ற மீனவர் உயிரிழந்தார். பிரான்சிஸ் என்ற மீனவரின் முதுகில் குண்டு பாய்ந்து அவர் படுகாயமடைந்தார்.
அடுத்தடுத்து இலங்கை படையினர் நடத்திய வெறித் தாக்குதலால் மீனவர்கள் பெரும் சோகத்திலும், பதட்டத்திலும் மூழ்கியுள்ளனர்.
கிறிஸ்டியின் சொந்த கிராமமான தங்கச்சி மடத்தில் பெரும் சோகத்துடன் மீனவர் குடும்பங்கள் உள்ளன. பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மீனவர்கள் தங்கச்சிமடத்தில் குவிந்துள்ளனர். பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரமுகர்களும் கிறிஸ்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
இலங்கை கடற்படையின் கொடூரச் செயலுக்கு கிறிஸ்டியின் குடும்பத்தில் இது 2வது பலியாகும். ஏற்கனவே கிறிஸ்டியின் தந்தை அந்தோணிச்சாமியும் சில ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கை கடற்படையின் துப்பாக்கிச் சூட்டில்தான் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொல்லப்பட்ட கிறிஸ்டியின் உடல் அடக்கம் பலத்த பாதுகாப்புக்கிடையே இன்று நடந்தது. பெரும் திரளான மீனவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
கொல்லப்பட்ட கிறிஸ்டியின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ. 1 லட்சம் இழப்பீடு அறிவித்துள்ளது. என்ன காரணத்திற்காக இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது என்பதை விசாரித்து அறிக்கை அனுப்புமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கும் அரசு உத்தரவிட்டுள்ளது.