'திவால்' உத்தரவு ரத்து-தப்பினார் ஜெயப்பிரதா!
சென்னை: 'திவால்' ஆனவர் என கடந்த 2006ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் இன்று ரத்து செய்தது. இதன் மூலம் ஜெயப்பிரதாவின் எம்.பி. பதவி தப்பியுள்ளது.சென்னை அண்ணா சாலை அருகே ஜெயப்பிரதாவுக்கு சொந்தமாக இரு தியேட்டர்கள் உள்ளன. மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி உள்ளிட்டவற்றை செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள், தியேட்டர்களை சமீபத்தில் ஜப்தி செய்தனர்.
இந்த நிலையில்தான் ஜெயப்பிரதா திவால் ஆனவர் என கடந்த 2006ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த விவகாரம் தெரிய வந்தது.
சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளர் கோபாலகிருஷ்ண ராவிடம் ஜெயப்பிரதா வாங்கிய கடனை வசூலிக்க அவர் தொடர்ந்த வழக்கில்தான் உயர்நீதிமன்றம் திவால் ஆனவராக ஜெயப்பிரதாவை அறிவித்துள்ளது.
ஜெயப்பிரதா சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தன்னை திவால் ஆனவராக அறிவித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இதை விசாரித்த நீதிபதி ராமசுப்ரமணியம், ஜெயப்பிரதாவுக்கு கண்டனம் தெரிவித்தார். பொது சேவையில் ஈடுபட்டிருக்கும் ஒருவர், எம்.பி பதவி வகிக்கும் ஒருவர் வரி கட்டாமல் ஏய்ப்பதா என்று கடுமையாக கேட்டார்.
மேலும், கிட்டத்தட்ட 500 நாட்கள் ஆன நிலையில் திவால் ஆனவராக அறிவிக்கப்பட்ட அறிவிப்பை எதிர்த்து மனு செய்வது ஏன் என்றும் நீதிபதி விணவியிருந்தார்.
இந்த நிலையில், ஜெயப்பிரதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர், உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளரிடம் வாங்கிய கடனை வட்டியுடன் திருப்பிச் செலுத்த ஜெயப்பிரதா தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
அப்படி ஜெயப்பிரதா செய்தால் அவரை திவால் ஆனவராக அறிவித்த அறிவிப்பை திரும்பப் பெறலாம் என உட்லண்ட்ஸ் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் நேற்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் இன்று அனைத்து பாக்கித் தொகைகளும் பைசல் செய்யப்பட்டன. நீதிபதி ராமசுப்ரமணியம் முன்பு இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜெயப்பிரதாவின் வழக்கறிஞர் 2 வரைவுக் காசோலைகளை (டிடி) நீதிபதியிடம் வழங்கினார்.
சென்னை மாநகராட்சிக்குச் செலுத்தப்பட வேண்டிய சொத்து வரியான ரூ. 19.20 லட்சத்திற்கான ஒரு டிடி, உட்லண்ட்ஸ் தியேட்டர் உரிமையாளருக்கான கடன் மற்றும் வட்டித் தொகையான ரூ. 6.5 லட்சத்திற்கான டிடி ஆகியவற்றை ஜெயப்பிரதாவின் வழக்கறிஞர்கள் தாக்கல் செய்தனர்.
அப்போது வணிக வரித் துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஜெயபிரதாவும், அவரது சகோதரர்களும் ரூ. 1,91,620 வரி பாக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.
அனைத்தையும் பரிசீலித்த நீதிபதி ராமசுப்ரமணியன், திவால் ஆனவராக அறிவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்ய கால தாமதம் எடுத்துக் கொண்டதை மன்னிக்குமாறு கோரி ஒரு மனுவும்,
சென்னை மாநகராட்சியின் ஜப்தி நடவடிக்கையை தடை செய்யக் கோரி ஒரு மனுவும், திவால் ஆனவராக அறிவிக்கப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்யக் கோரியும் ஜெயப்பிரதா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டார்.
இறுதியில், ஜெயப்பிரதா திவால் ஆனவர் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீதிபதி ரத்து செய்தார்.
இதன் மூலம் ஜெயப்பிரதாவின் எம்.பி. பதவிக்கு வந்த ஆபத்து நீங்கியது. உ.பி. மாநிலத்திலிருந்து சமாஜ்வாடிக் கட்சியின் எம்.பியாக ஜெயப்பிரதா இருக்கிறார் என்பது நினைவிருக்கலாம்.