உயிருக்கு பாதுகாப்பு கேட்கும் ஜெ-சசியின் ஜோதிடர்
சென்னை: தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதால் தனக்கு பாதுகாப்பு வழங்க போலீஸாருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் மாஜி ஜோதிடர் மனு தாக்கல் செய்துள்ளார்.
ஜெயலலிதாவின் முன்னாள் ஜோதிடரான ஈரோட்டைச் சேர்ந்த ரத்தன் பண்டிட் வெற்றிவேல் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில்,
நான் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் ஜோதிடராக இருந்தேன். சமீபத்தில் சசிகலாவின் உறவினர் ராவணன் என்னை கடத்தி சென்று மிரட்டி வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கினார்.
இதை தொடர்ந்து எனக்கு கொலை மிரட்டல் வருகிறது. இதனால் என் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு உள்ளது.
இது தொடர்பாக போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எனக்கு பாதுகாப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி தனபாலன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அதை விசாரித்த நீதிபதி போலீஸ் கமிஷனர் மற்றும் உள்துறை செயலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.