கூந்தன்குளத்தில் குவிந்த வெளிநாட்டு பறவைகள்
நெல்லை: கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் ஏராளமான அரிய வகை வெளிநாட்டுப் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக வந்து குவிந்துள்ளன.
தமிழகத்தில் உள்ள பறவைகள் சரணாலயங்களில் வேடந்தாங்கலுக்கு அடுத்தபடியாக நெல்லை மாவட்டம் கூந்தன்குளம் கிராமத்தில் உள்ள சரணாலயம் குறிப்பிடத்தக்கது.
ஆண்டுதோறும் ஜனவரி மாதவாக்கில் ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து குவிகின்றன.
சைபீரியா, நைஜீரியா. ஸ்விட்சர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து இந்த பறவைகள் வருகின்றன. இந்த ஆண்டு பருவமழை தாமதம் காரணமாக பிப்ரவரி மாத இறுதியில்தான் பறவைகள் வரத்து தொடங்கியது. கடந்த இரு நாட்களாக அதிக அளவில் பறவைகள் வந்துள்ளன.
கூந்தன்குளம் கிராமத்தை ஒட்டிய ஏரியில் உள்ள கருவேல மரங்களிலும், வீடுகளைச் சுற்றியுள்ள மரங்களிலும், பறவைகள் கூடுகட்டி அவற்றில் முட்டையிட்டு குஞசு பொறிக்கின்றன. குஞ்சுகள் வளர்ந்து பறக்கும தருவாயில் தங்கள் தாயகத்துக்கு அழைத்து செல்கின்றன
பல தலைமுறையாக அந்த கிராமத்து மக்கள் காட்டும் பிரியமும், சுற்றுப்பகுதி குளங்களில் கிடைக்கும் தாராளமான உணவுமே பறவைகள் இங்கு அதிக அளவில் வருவதற்குக் காரணமாக அமைந்துள்ளன.
தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளின்போதுகூட பறவைகளை அச்சுறுத்தும் பட்டாசுகள் மற்றும் வெடிப்பொருள்களுக்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பறவைகளை சுற்றுலா பயணிகள் சிரமமில்லாமல் பார்வையிட வசதியாக வனத்துறையினரால் உயர்ந்த கோபுரமும், பைனாகுலர்களும் அமைக்கப்பட்டுள்ளன.
பறவைகள் பற்றி ஆய்வு செய்யும் ஆராய்ச்சி மாணவர்களுக்காக இங்கு தங்குமிடமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.