அரசுக்கு ஆதரவு வாபஸ்: இடதுசாரிகளின் புது மிரட்டல்!
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக மத்திய அரசுடன் மோதல் போக்கை மேற்கொண்டுள்ள இடதுசாரிகள் தற்போது புதிய மிரட்டலை விடுத்துள்ளன.
அமெரிக்காவுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரம் காட்டினால் உடனடியாக ஆதரவைத் திரும்பப் பெறப் போவதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஏ.பி.பரதன் எச்சரித்துள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில் பரதன் கூறியிருப்பதாவது:
அமெரிக்கவுடனான அணுசக்தி ஒப்பந்த நடவடிக்கையில் தீவிரம் காட்டினால் மத்திய அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெற நேரிடும். அரசின் அப்படிப்பட்ட முடிவுக்கு நாங்களும் ஒரு அங்கமாக இருக்க மாட்டோம்.
அணுசக்தி ஒப்பந்த விவகாரத்தில் கட்சி கண்ணோட்ட அரசியலை விட்டு நாட்டு நலனை கருத்தில் கொண்டு இதை ஆதரிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரும், பாஜவின் முக்கிய தலைவருமான வாஜ்பாய்க்கு அழைப்பு விடுத்துள்ளீர்கள். இதை, அணு சக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்க பாஜவுக்கு விடுத்துள்ள பகிரங்க அழைப்பாகவே நாங்கள் கருதுகிறோம்.
இந்த விவகாரம் தொடர்பாக கருத்து ஒற்றுமை காண்போம் என்று கூறியுள்ளீர்கள். ஆனால் நாடாளுமனற விவாதத்திலேயே அதை காண முடியவில்லை. உங்கள் கருத்து வலுவற்றதாக உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பாலானோர் அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை நீங்கள் அறிவீர்களா?
சமீபகாலமாக அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக வரும் செய்திகள் எங்களுக்கு கவலை தருவதாக உள்ளது. ஒப்பந்தத்தை விரைவாக அமல்படுத்த அமெரிக்கா நெருக்கடி தருகிறது. ஆனால் அதை மத்திய அரசு கண்டிக்காதது கவலை அளிக்கிறது.
இந்த ஒப்பந்தம் இந்தியாவின் தேசிய நலன்களுக்கும், சுதந்திரமான வெளியுறவு கொள்கைக்கும், இறையாண்மைக்கும் எதிரானது என்று நாங்கள் கருதுவது உங்களுக்குத் தெரியும்.
அணுசக்தி ஒப்பந்தம் மட்டுமல்லாது பிற விவகாரங்களிலும் குறைந்தபட்ச பொது ஒப்பந்தத்தை மீறும் வகையிலேயே அரசு நடந்து வருகிறது. சுற்றுப் பயணத்தில் இருப்பதால் இக்கடிதத்தை பேக்ஸ் மூலம் அனுப்புகிறேன் என்று கூறியுள்ளார் பரதன்.
சோனியா - மன்மோகன் ஆலோசனை:
பரதனின் பகிரங்க மிரட்டலைத் தொடர்ந்து ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தலைவர் சோனியா காந்தியை, பிரதமர் மன்மோகன் சிங் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இடதுசாரிகளின் புதிய, பகிரங்க மிரட்டல் குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.