For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கணவர் கேலி செய்ததால் 2 பெண் குழந்தைகளைக் கொன்ற தாய்

By Staff
Google Oneindia Tamil News

கொல்கத்தா: பெண் குழந்தைகளாக பெற்றுள்ளாயே என்று கணவர் கேலி செய்ததால் ஆத்திரமடைந்த பெண், தனது இரு பெண் குழந்தைகளையும் நீரில் மூழ்கடித்துக் கொலை செய்தார்.

மேற்கு வங்க மாவட்டம் பர்த்வான் மாவட்டம், சகரம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் சீமா சோய். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில், ஹெளரா மாவட்டம் பேலூரில் உள்ள ராமகிருஷ்ணா மடம் மற்றும் மிஷன் வளாகத்தில் உள்ள குளத்தில் இரண்டு பெண் குழந்தைகளின் (ஒரு குழந்தைக்கு 4 வயது, இன்னொன்றுக்கு 7 மாதம்) உடல்கள் மீட்கப்பட்டன.

இதுகுறித்து போலீஸார் விசாரித்தபோது அவை இரண்டும் சீமா சோயின் குழந்தைகள் எனத் தெரிய வந்தது.

இதையடுத்து போலீஸார் சீமா சோயிடம் விசாரித்தபோது அதிர்ச்சிகரமான தகவல்களை அவர் வெளியிட்டார்.

இதுகுறித்து ஹெளரா மாவட்ட எஸ்.பி. நீரஜ் குமார் சிங் கூறுகையில், அடுத்தடுத்து இரு பெண் குழந்தைகள் பிறந்ததால், சீமா சோயின் கணவரும், மற்ற உறவினர்களும் அவரைக் கேலி செய்துள்ளனர், திட்டியுள்ளனர்.

இதனால் மனம் உடைந்த சீமா சோய் இரு குழந்தைகளையும் கொல்ல முடிவு செய்தார். செவ்வாய்க்கிழமை காலை அவரது கணவர் காஞ்சன் மூத்த மகளுக்கு உடல் நலம் சரியில்லாததால் அவளை மருத்துவமனைக்குக் கூட்டிச் செல்லுமாறு சீமாவிடம் கூறியுள்ளார்.

இதைப் பயன்படுத்திக் கொண்ட சீமா இரு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு லிலுவா நகருக்கு ரயில் ஏறினார். அங்கு இறங்கியதும் ஒரு ரிக்ஷாவைப் பிடித்து ராமகிருஷ்ணா மடத்துக்கு வந்தார்.

மாலையில் வந்து சேர்ந்த அவர் அங்கு மாலை நேர பிரார்த்தனை நடந்து கொண்டிருந்தது. குளத்தின் அருகே யாரும் இல்லாததைப் பயன்படுத்தி, இரு குழந்தைகளையும் ஒன்றன் பின் ஒன்றாக குளத்தில் மூழ்கடித்தார். சிறிது நேரத்தில் இரு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்தன.

இதையடுத்து பர்த்வான் திரும்பிய அவர் அங்கிருந்து சகரம் கிராமத்துக்கு பேருந்தில் பயணித்தார். பேருந்திலிருந்து இறங்கியதும் அவர் மயக்கமடைந்து விழுந்தார். அங்கிருந்தவர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த நிலையில் அடுத்த நாள் காலையில் இரு குழந்தைகளின் உடல்களும் நாளிதழ்களில் வந்ததைப் பார்த்த சீமாவின் சகோதரர் ரஞ்சித் மண்டல், பல்லி காவல் நிலையத்தை அணுகி அவை தனது சகோதரியின் குழந்தைகள் எனத் தெரிவித்தார். மேலும் தனது சகோதரியையும் காணவில்லை என்று தெரிவித்தார். இதையடுத்து சீமாவை போலீஸார் கண்டுபிடித்தனர். அதன் பிறகுதான் நடந்தது தெரிய வந்தது.

இரு குழந்தைகளையும் கொன்று விட்டு திரும்பிய அவர் ஹூக்ளி நதியில் குதித்துத் தற்கொலை செய்ய தீர்மானித்தார். ஆனால் அங்கு ஆட்கள் நடமாட்டம் நிறைய பேர் இருந்ததால் அந்த முயற்சியை விட்டு விட்டு வீட்டுக்குத் திரும்பியுள்ளார் என்றார்.

கணவர் கேலி செய்ததால் இரு பெண் குழந்தைகளையும் கொன்ற தாயின் செயல் மேற்கு வங்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X