மாணவியிடம் பலாத்காரம்-டிவி தயாரிப்பாளர் கைது
சென்னை: டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி கல்லூரி மாணவியிடம் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாக பிரபல தமிழ்த் தொலைக்காட்சியில், நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வரும் கோபிநாத் உள்ளிட்ட நான்கு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பிரபல தமிழ் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராக பணியாற்றி வருபவர் கோபிநாத். இவர் மீது பிரீத்தினா (18) என்ற கல்லூரி மாணவி நீலாங்கரை காவல் நிலையத்தில் செக்ஸ் தொல்லை புகார் கொடுத்தார்.
இவர் சென்னையில் உள்ள ஒரு கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் முதலாமாண்டு படித்து வருகிறார்.
அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் கோபிநாத் உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட மாணவி, கோபிநாத்தை அணுகி டிவி தொடரில் நடிக்க வாய்ப்பு கேட்டுள்ளார். கோபிநாத்தும் வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அந்த மாணவியை கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அழைத்துள்ளார் கோபிநாத். அவருடன் அவரது நண்பர் காமராஜ் (32) என்பவரும் உடன் சென்றுள்ளார்.
அங்கு வைத்து பிரீத்தினாவை கோபிநாத்தும், காமராஜும் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது.
அவர்களிடமிருந்து தப்பி வந்த பிரீத்தினா, நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து விரைந்து சென்ற போலீஸார் கோபிநாத், காமராஜ், சம்பந்தப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் இருவரைக் கைது செய்தனர்.
பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர். சென்னை டிவி வட்டாரத்தில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.