ஜஸ்வந்த் சிங்கை சந்திக்கவில்லை-ஜெயலலிதா மறுப்பு
சென்னை: நடிகர் நம்பியார் வீட்டுக்குச் சென்றபோது அங்கு பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்கை தான் சந்தித்தாக வெளியான செய்தியை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறுத்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனது 60வது பிறந்தநாளையொட்டி பழம் பெரும் கலைஞர்கள் நம்பியார், பாலாஜி, முக்தா சீனிவாசன், துக்ளக் ஆசிரியர் சோ உள்ளிட்ட 7 பிரபலங்களின் இல்லங்களுக்குச் சென்று ஆசி பெற்றார்.
நம்பியார் வீட்டுக்கு அவர் போனபோது அங்கிருந்த பாஜக மூத்த தலைவர் ஜஸ்வந்த் சிங்குடன் அவர் பேசியதாக செய்திகள் வெளியாகின. இந்த சந்திப்பின்போது நம்பியாரின் மகனும், தமிழக பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான சுகுமாரன் நம்பியாரும் உடன் இருந்தார் என்றும் கூறப்பட்டது.
ஆனால் இதை ஜெயலலிதா மறுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 7ம் தேதி நான் நம்பியார் வீட்டுக்குச் சென்றது, எனது பிறந்த நாளையொட்டி அவரிடம் ஆசி பெறுவதற்காகத்தான்.
அங்கு யாருடனும் அரசியல் பேசுவதற்காக நான் செல்லவில்லை. நான் நம்பியாரையும், அவரது குடும்பத்தினரையும் மட்டுமே சந்தித்தேன். வேறு யாரையும் சந்திக்கவில்லை.
7 பெரியவர்களை மட்டுமே அன்று சந்தித்தேன். எனது சந்திப்பின்போது அந்தப் பெரியவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் மட்டுமே அப்போது இருந்தனர் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
எனக்கு யாரும் ஜோதிடர் இல்லை:
அவர் வெளியிட்டுள்ள இன்னொரு அறிக்கையில்,
ஈரோட்டைச் சேர்ந்த ரத்தன் பண்டிட் வெற்றிவேல் என்ற ஒரு நபர் குறித்து பத்திரிகைகளில் செய்திகள் வெளியிடும் போது, ஜெயலலிதாவின் ஜோதிடர் என்று குறிப்பிட்டு பத்திரிகைகளில் அடிக்கடி செய்திகள் வெளி வருகின்றன.
இவ்வாறு குறிப்பிடுவதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன். எனக்கு என்று தனிப்பட்ட முறையில் எந்த ஜோதிடரும் இல்லை.
இனி வருங்காலங்களில், இது போன்ற உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.