பள்ளிகளில் புகார் பெட்டிகளை வைக்க அரசு உத்தரவு
பள்ளிகளில் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை தாக்குதல்கள், மாணவிகள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரம் போன்றவை அதிகரித்து வருகின்றன.
இவை பெரும்பாலும் வெளியில் வருவதில்லை. குழந்தைகளின் எதிர்காலம் கருதி பெற்றோர்களும் வெளியில் சொல்வதில்லை. பள்ளிகளும் மூடி மறைத்து விடுகின்றன. இதனால் குழந்தைகள் மன உளைச்சல் அடைகின்றன.
இது தொடர்பாக தேசிய குழந்தைகள் உரிமை ஆணையம் சமீபத்தில் சென்னையில் பொது விசாரணை நடத்தியது. அதில் இது தொடர்பான பிரச்னைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. எல்லாவித வன்முறைகளில் இருந்தும் குழந்தைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசுக்கு ஆணையம் பரிந்துரைத்தது.
அனைத்து பள்ளிகளிலும் குழந்தைகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி எல்லா மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது.
இதையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் பாதிக்கப்படும் குழந்தைகள் புகார் தெரிவிக்க வசதியாக புகார் பெட்டி வைக்க தமிழக பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் வழங்கப்படும் தண்டனைகளுக்கு எதிராக குரல் கொடுக்கவும், உயரதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கவும் தங்களுக்கு உரிமை உண்டு என்ற விழிப்புணர்வை குழந்தைகளிடம் ஏற்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் தங்களுக்கு அளிக்குப்பட்ட தண்டனைகளுக்கு எதிராக பேச குழந்தைகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும்.
அனைத்து பள்ளிகள், விடுதிகள், குழந்தை பராமரிப்பு அமைப்புகள், இல்லங்கள் ஆகியவற்றில் சிறப்பு அமைப்புகள் ஏற்படுத்த வேண்டும். குழந்தைகள் தங்கள் பிரச்னைகளை தயங்காமல் வெளிப்படுத்தும் சூழலை ஏற்படுத்த வேண்டும். இதற்காக தன்னார்வ அமைப்புகளின் உதவியை நாடலாம்.
அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட வேண்டும். இவற்றில் யார் மீது புகார் சொல்ல குழந்தைகள் விரும்புகிறார்களோ அவர்கள் குறித்து புகார்களை போடலாம். அனுப்புனர் முகவரி இல்லையென்றாலும் புகார்கள் ஏற்கப்பட வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் தண்டனை, வன்முறைகளைக் கண்காணித்து கல்வித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிகளுக்கு அரசு அனுப்பியுள்ள உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.