'டாக்டைம்' முற்றிலும் இலவசம்!: இது கலாம் பாலிசி
டெல்லி: முன்னணி அரசியல் தலைவர்களுக்கு முன்னோடியாக விளங்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் தான் கலந்துகொள்ளும் விழாக்களில் கட்டணம் எதுவும் வாங்காமல் இலவசமாக சொற்பொழிவுகளை ஆற்றி வருகிறார்.
77 வயதை கடந்த அப்துல்கலாம் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய கடந்த 8 மாதங்களுக்குள் உள்நாட்டில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழாக்களில் கலந்து கொண்டு இதுவரை 160க்கும் மேற்பட்ட சொற்பொழிவை ஆற்றியுள்ளார்.
இதுபற்றி கலாமின் செயலாளர் ஹெச்.ஷெரிடன் கூறுகையில், அவரது பதவிக் காலத்தில் இருந்ததைவிட இப்போது அதிக பிஸியாக உள்ளார். தங்களது விழாவுக்கு தலைமை தாங்குமாறு பல்வேறு தரப்பில் இருந்தும் ஒரு நாளைக்கு குறைந்தது 10 முதல் 15 அழைப்பிதழ்களாவது கலாமுக்கு வருகின்றன.
அவற்றை ஏற்றுக் கொண்டு விழாக்களுக்குச் செல்கிறார். இருந்தாலும் அழைப்பிதழ்கள் ஓய்ந்தபாடில்லை. வாரத்துக்கு 3 விழாக்களிலாவது கலந்து கொள்கிறார்.
எங்கு சென்று பேசினாலும் அதற்கு கலாம் கட்டணம் வசூலிப்பதில்லை. பதவி விலகிய பிறகு 7 முறை வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார். இங்கிலாந்து, இஸ்ரேல், நெதர்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் கலாம் ஆற்றிய உரைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
அமெரிக்காவில் சர்வதேச விண்வெளி மாநாட்டிலும், தொழில்முனைவோர் மத்தியில் பிட்ஸ்பர்க்கிலும் உலகமயமாக்கல் பற்றி அவர் பேசச் சென்றபோதும் ஆர்வத்துடன் வரவேற்கப்பட்டார். இந்த சொற்பொழிவுக்கும் அவர் கட்டணம் பெறவில்லை என்றார்.
கலாம் தனது பதவிக்காலத்தில் ஒருமுறைகூட அமெரிக்காவுக்கு அதிகாரப்பூர்வமாக பயணம் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
'கலாம் வழி, தனி வழி' என்றாலும், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதிகள் எல்லாம் அப்படியல்ல!..
நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி பில் கிளின்டன், தனது பதவிக் காலத்துக்குப் பிறகு வங்கிகள், மக்கள் தொடர்பு நிறுவனங்கள், விளம்பர நிறுவனங்கள், இஸ்ரேலிய மற்றும் யூத குழுமங்களின் அழைப்பையேற்று 59 தடவை உரையாற்றியுள்ளார். இதற்காக அவர் பெற்ற சன்மானம் எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட ரூ. 38 கோடி!
இப்போதைய ஜனாதிபதி புஷ்ஷின் தந்தை சீனியர் புஷ் பதவி விலகியபிறகு அவரது ஒரு பேச்சுக்கு 'குளோபல் கிராசிங்' என்ற தொலைதொடர்பு நிறுவனம் 80மில்லியன் டாலர்கள் மதிப்பிலான 'பங்கு'களை கொடுத்ததாம். (பிறகு அந்த நிறுவனம் திவாலானது வேறு கதை)