கொல்கத்தா டூ டாக்காவுக்கு புதிய ரயில்
டெல்லி: கொல்கத்தாவிலிருந்து, டாக்காவுக்கு புதிய ரயில் விடப்படும் என மத்திய ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று லோக்சபாவில் அறிவித்தார். இந்தப் புதிய ரயிலின் மூலம் இரு நாட்டு உறவுகளும், இரு
நாட்டு மக்களின் உறவும் மேலும் வலுப்படும் என்றார் அவர்.
மைத்ரி எக்ஸ்பிரஸ் என இந்தப் புதிய ரயிலுக்குப் பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 14ம் தேதி முதல் இந்த ரயில் ஓடத் தொடங்கும். லோக்சபாவில் நடந்த ரயில்வே பட்ஜெட் மீதான விவாதத்திற்குப் பதிலளித்து இன்று லாலு பிரசாத் யாதவ் பேசினார்.
ஸ்ரீபெரும்புதூருக்கு ரயில் பாதை:
லாலு பிரசாத் பேசுகையில், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட ஸ்ரீபெரும்புதூரை, ரயில்வே மேப்பில் இடம் பெற வைக்கும் வகையில் அங்கு ரயில் பாதை அமைக்கப்படும். இதுதொடர்பான திட்டம் அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் சர்வே தொடங்கும்.
ஆக்ரா- ஆஜ்மீர், கான்பூர்-ஜம்மு மார்க்கங்களில் புதிய ரயில்கள் விடப்படும். ராஜேந்திர நகர்-ஜம்மு எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களின் சேவை அதிகரிக்கப்படும்.
இந்திய ரயில்வேயை முழமையாக தனியார்மயமாக்கும் எண்ணம் அரசிடம் இல்லை. ரயில்வேயின் முக்கியப் பணிகள் தனியார் மயமாக்கப்பட மாட்டாது. எனவே இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கவலைப்படத் தேவையில்லை.
ரயில்வே துறை ஏற்கனவே ரூ. 25 ஆயிரம் கோடி உபரி நிதியைக் கொண்டுள்ளது. நான் ரயில்வே அமைச்சர் பதவியை முடிக்கும்போது இது ரூ. 1 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கும்.
மாயாஜாலத்தால் நான் ரயில்வேயை லாபப் பாதையில் கொண்டு செல்லவில்லை. திட்டமிட்ட செயல்பாடுகள், அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்டவைதான் இந்த வளர்ச்சிக்கும், ரயில்வேயின் நலத்துக்கும் முக்கிய காரணம்.
மேலும், ரயில்வே துறையில் உள்ள 10.4 லட்சம் ஊழியர்களையும் ஒரே குடும்பமாக பாவித்து நான் நடத்தினேன். இதுவும் ரயில்வேயின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றார் லாலு.