தமிழகம் முழுவதும் பாலை கூடுதல் விலைக்கு விற்றவர்கள் கைது
சென்னை: தமிழகத்தில் ஆவின் பாலை அதிக விலைக்கு விற்ற பலர் கைது செய்யப்பட்டனர்.
தமிழகத்தில் பல இடங்களில் அரசு அறிவித்த ரூ.2க்கு மேல் பால் விலை மிக அதிகமாக உயர்த்தப்பட்டது.
இது தொடர்பாக பால்வளத்துறை அமைச்சர் மதிவாணன் கடும் எச்சரிக்கை விடுத்தார்.
இந்த விஷயத்தில் தவறு செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க ஆவின் அதிகாரிகளுக்கும் காவல்துறையினருக்கும் முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டார்.
இதையடுத்து இன்று அதிகாலை முதல் போலீசார் நடவடிக்கையில் இறங்கினர். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஆவின் அதிகாரிகள், காவல்துறையினர் இன்று அதிகாலை ரோந்து சென்று பால் பூத்களிலும், தனியார் கடைகளிலும் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா நகர், அம்பத்தூர், ஆவடி, கொடுங்கையூர், வியாசர்பாடி, எம்.கே.பி.நகர், சர்மா நகர், எழும்பூர், ஹால்ஸ் ரோடு சந்தோஷ் நகர், சிந்தாரிப்பேட்டை, வேப்பேரி, திருவல்லிக்கேணி, திருமங்கலம், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
பூத்களில் பால் விலையை விசாரித்த அவர்கள், பால் வாங்கியவர்களிடம் எவ்வளவு பணம் கொடுத்தீர்கள் என விசாரித்தனர். அதிக விலைக்கு பால் விற்ற பலரும் கைது செய்யப்பட்டனர்.
சென்னையில் மட்டும் 50க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25 விற்பனையாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது நுகர்வோரை ஏமாற்றுதல் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதே போல தமிழகத்தின் பல இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டு பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். எங்காவது பால் கூடுதல் விலைக்கு விற்கப்பட்டால் காவல்துறைக்கு தகவல் தரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.