For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரஜினியை முதல்வராக்க நினைத்த நரசிம்ம ராவ்

By Staff
Google Oneindia Tamil News

Rajini
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை, காங்கிரஸ் கட்சியின் சார்பில் முதல்வர் பதவியில் அமர்த்த மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் திட்டமிட்டிருந்ததாகவும், அதை ரஜினி ஏற்கவில்லை என்றும் ரஜினி குறித்து சென்னை பெண் டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த் எழுதியுள்ள நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த டாக்டர் காயத்ரி ஸ்ரீகாந்த், தி நேம் இஸ் ரஜினிகாந்த் என்ற பெயரில் ஒரு நூலை எழுதியுள்ளார். அதில் ரஜினி குறித்த பல்வேறு தகவல்கள் குவிந்துள்ளன.

இதில் ரஜினியைத் தேடி முதல்வர் பதவி வந்ததாக ஒரு தகவல் இடம் பெற்றுள்ளது.

அது 1995. அப்போது ஜெயலலிதாவுடன் கடும் மோதல் போக்கில் இருந்தார் ரஜினிகாந்த். ஜெயலலிதா ஆட்சியில் வெடிகுண்டுக் கலாச்சாரம் பெருகி விட்டதாக கடுமையாக குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில்தான் ரஜினிக்கு அப்போதைய பிரதமர் நரசிம்மராவிடமிருந்து போன் வந்தது. காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதற்காக ரஜினிக்கு, ராவ் நன்றி கூறினார். பின்னர் காங்கிரஸ் சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தால் உங்களை முதல்வர் பதவியில் அமர்த்த விரும்புகிறேன் என்று கூறியுள்ளார் ராவ்.

இதைக் கேட்ட ரஜினிகாந்த், யோசித்துச் சொல்வதாக தெரிவித்தார். பின்னர் தான் சென்னைக்கு வரவுள்ளதாகவும், அப்போது நேரில் சந்தித்து முடிவெடுக்கலாம் எனவும் ராவ் கூறியுள்ளார்.

அதன்படி நரசிம்மராவ் சென்னைக்கு வந்தபோது, சத்தியமூர்த்தி பவனில் வைத்து ராவ் - ரஜினி சந்திப்பு நடந்தது. இந்த சந்திப்பின்போது, தனக்கு முதல்வர் பதவி வேண்டாம் என கூறி விட்டார் ரஜினி. மேலும், முதல்வர் பதவிக்குப் பொருத்தமானவர் மூப்பனார்தான். எனவே அவரையே முதல்வராக்குங்கள் என்றும் கூறியுள்ளார் ரஜினி.

அத்தோடு நில்லாமல், காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் இடம் பெற வேண்டும் என நான் நினைக்கிறேன் (அப்போது அதிமுக கூட்டணியில் காங்கிரஸ் இருந்தது). திமுகவுக்கு நாம் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்றும் ராவிடம் கூறினார் ரஜினி.

ஆனால் இதை ராவ் விரும்பவில்லை. ரஜினி நேரடியாகப் போட்டியிட்டால் காங்கிரஸ் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை கிடைக்கும். சொந்தக் காலில் ஆட்சி அமைக்க முடியும். அதேசமயம், திமுகவுக்கு வாய்ப்பளிக்க அவர் விரும்பவில்லை. மேலும் மூப்பனாரை முதல்வராக்கவும் அவர் விரும்பவில்லை.

இது ரஜினிக்கும் புரிய வந்தது. திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு அவர் வந்தார்.

அவர் எதிர்பார்த்தபடியே அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என நரசிம்ம ராவ் அறிவித்தார். காங்கிரஸ் உடைந்தது. மூப்பனார் தலைையில் தமிழ் மாநில காங்கிரஸ் உதயமானது. திமுகவுடன் கூட்டணி வைத்தது. ரஜினி ஆதரவு அளித்தார். திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதிமுக-காங்கிரஸ் கூட்டணி படு தோல்வியைச் சந்தித்தது. ஜெயலலிதாவும் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது என்று காயத்ரியின் நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X