'காதல் மன்னன்' லியாகத் அலிக்கு எய்ட்ஸ்!
சென்னை: இணைய தளம் மூலம் பல பெண்களை ஏமாற்றித் திருமணம் செய்து செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட காதல் மன்னன் லியாகத் அலி எய்ட்ஸ்' நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.இணையதளம் மூலம் பல பெயர்களில் பெண்களை ஏமாற்றி திருமணம் செய்து செக்ஸ் லீலைகள் புரிந்தவர் லியாகத் அலி கான். சென்னை புளியந்தோப்பு, ஓட்டேரி மற்றும் ஸ்ரீரங்கம் ஆகிய போலீஸ் நிலையங்களில் லியாகத் அலி மீது பெண்களை மோசடி செய்ததாக பல வழக்குகள் உள்ளன.
இதையடுத்து லியாகத் அலி கைது செய்யப்பட்டு, சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.
பலமுறை முயற்சி செய்தும் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை.
சிறையில் தோல் வியாதியால் அவதிப்பட்டு வந்த லியாகத் அலி, சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு ரத்த பரிசோதனை செய்யப்பட்டது.
பரிசோதனையில் அவருக்கு எய்ட்ஸ்' நோய் இருப்பதாக முதலில் டாக்டர்கள் சந்தேகப்பட்டனர். அதை உறுதி செய்வதற்காக மேலும் பல பரிசோதனைகள் நடந்தன. இந்த பரிசோதனைகள் மூலம் லியாகத் அலிக்கு எய்ட்ஸ்' நோய் இருப்பது உறுதியாகியுள்ளது.
உடனடியாக புழல் ஜெயில் ஆஸ்பத்திரியில் உள்ள எய்ட்ஸ் நோய் சிகிச்சை பிரிவில் லியாகத் அலி சேர்க்கப்பட்டார். அங்கு ஏற்கனவே 7 கைதிகள் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது 8-வது நபராக லியாகத் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதாக கூறப்படுகிறது. இதனால் டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.