For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

முகேஷ் அம்பானியின் பேராசை-ராமதாஸ் தாக்கு

By Staff
Google Oneindia Tamil News

Ramdoss
சென்னை: பல ஆயிரம் கோடிகளைக் குவித்து, உலகின் முதல் பத்து பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ள முகேஷ் அம்பானிக்கு, சில்லரை வணிகத்தையும் விட்டுவைக்கக் கூடாது என்கிற பேராசை ஏற்பட்டிருக்கிறது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஏற்கனவே, பல ஆயிரம் கோடிகளைக் குவித்து, உலகின் முதல் பத்து பணக்காரர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ள முகேஷ் அம்பானிக்கு, நமது நாட்டில் கோடிக்கணக்கான குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பு அளித்து வரும் சில்லரை வணிகத்தையும் விட்டுவைக்கக் கூடாது என்கிற பேராசை ஏற்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்களில் ஏற்கனவே, சில்லரை வணிகக் கடைகளைத் திறந்துள்ள முகேஷ் அம்பானி இப்போது அதன் வளர்ச்சி வேகம் போதாது என்று, நாடு முழுவதும் சில்லரை வணிகக் கடைகளை விரைந்து விரிவுபடுத்தும் வகையில் முழு மூச்சில் காரியமாற்றப் புறப்பட்டிருக்கிறார்.

இது ஒருபுறம் இருக்கையில், சில்லரை வணிகத்தில் 100 விழுக்காடு அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும் என்கிற அறிவிப்பைத் தொடர்ந்து பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களும் சில்லரை வணிகத்தில் ஈடுபட படையெடுக்கப் போகின்றன.

நம்முடைய நாட்டில் சிறு, சிறு பெட்டிக் கடைகளும், சிறிய மளிகைக் கடைகளும் வேலைவாய்ப்பை உருவாக்குவதில் பெரும்பங்கு வகிக்கின்றன. கோடிக்கணக்கான குடும்பங்கள் சில்லரை வணிகத்தை நம்பி வாழ்ந்து கொண்டிருக்கின்றன. கோடிக்கணக்கான பேர் சில்லரை வணிகத்தினால் வேலைவாய்ப்பும் பெற்று வருகிறார்கள்.

இந்த வாய்ப்பினை இழக்க நமது சிறு வியாபாரிகள் தயாராக இல்லை என்பதை அரசு உணர வேண்டும்.

இங்குள்ள பெரும் தொழில் நிறுவனங்களையும், பன்னாட்டுத் தொழில் நிறுவனங்களையும் எந்த வித கட்டுப்பாடுமின்றி சில்லரை வணிகத்தில் ஈடுபட அனுமதித்தால் கோடிக்கணக்கான ஏழை மக்களின் வேலைவாய்ப்பு பறிபோய்விடும்.

அத்தகைய நிலைமை கோடிக்கணக்கானவர்களைப் போராட்டத்தில் தள்ளிவிடும். எனவே, இந்தச் சமூகப் பிரச்சினையில் மாநில அரசு மிகத் தெளிவான முடிவை மேற்கொண்டு அறிவிக்க வேண்டும்.

சில்லரை வணிகத்தில் பெரும் தொழில் நிறுவனங்கள் ஈடுபடுவதைக் கட்டுப்படுத்த கேரளம் மற்றும் மேற்குவங்கம் போன்ற மாநிலங்களில் எத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறார்கள் என்பதை அறிந்து அதற்கேற்ப நடவடிக்கைகளைத் தமிழகத்தில் மேற்கொள்ளத் தயங்க மாட்டோம் என்று ஏற்கனவே முதல்வர் கருணாநிதி அறிவித்திருக்கிறார்.

அந்த உறுதியின்படி பெரும் தொழில் நிறுவனங்கள் சில்லரை வணிகத்தில் ஈடுபடுவதற்கு உடனடியாகக் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும். நமது உள்ளூர் மக்கள் நடத்திக்கொண்டிருக்கும் சிறு, சிறு பெட்டிக் கடைகள் மற்றும் மளிகைக் கடைகளில் விற்பனை செய்யும் எந்தப் பொருளையும் பெரும் தொழில் நிறுவனங்களின் சில்லரை அங்காடிகளில் விற்கத் தடை விதிக்கும் ஒழுங்குமுறை விதிமுறைகளை வகுக்க வேண்டும்.

இதற்கான அறிவிப்பினை 2008-2009 ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் வெளியிட வேண்டும். அதன் மூலம் நமது சில்லரை வணிகர்களையும், அவர்களது வேலைவாய்ப்பையும் காப்பதற்கு அரசு முன் வர வேண்டும்.

இல்லையேல், சில்லறை வணிகர்களும், சில்லரை வணிகக் கடைகளால் வேலைவாய்ப்பு பெற்று வருகிறவர்களும் போராட்டத்தில் குதிக்கும் நிலைமை தவிர்க்க முடியாததாகிவிடும். அத்தகைய நிலைமை ஏற்பட்டால் பா.ம.க. சில்லரை வணிகர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் நேரடியாகக் குதிக்கும்.

அவர்களது வாழ்வாதார உரிமை நிலைநாட்டப்படும் வரையில் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தவும் தயங்காது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X