ரூ.4 லட்சம் லஞ்சம்: பிஎப் அதிகாரி கைது
திருச்சி: தனியார் கல்வி நிறுவனத்துக்கு பி.எப் கணக்கு தொடங்க ரூ.4 லட்சம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தில் உள்ள கல்வி நிறுவனம், தனது கல்லூரிகளின் பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடங்குவதற்காக திருச்சியில் உள்ள வருங்கால வைப்பு நிதி அலுவலகத்ததை தொடர்பு கொண்டது.
அதற்கு பிஎப் அலுவலக உதவி கமிஷனர் பாண்டியன், ரூ.4 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என்று கேட்டுள்ளார். இதுகுறித்து, கல்லூரி நிர்வாகம் தரப்பில் சிபிஐயில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து சிபிஐ அதிகாரிகள் பிஎப் அலுவலகத்தில் ரகசியமாக கண்காணித்தனர்.
கல்லூரி நிர்வாகத்தினரிடம் இருந்து பாண்டியன் பணத்தை வாங்கும்போது சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். அலுவலகத்தில் நடத்திய சோதனையில் பல ஆவணங்கள் சிக்கியதாகக் கூறப்படுகிறது.