முட்டத்தில் துறைமுகம் கட்டும் ஜேப்பியார்
சென்னை: கன்னியாகுமரி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் கடலோர கிராமமான முட்டத்தில், சிறிய அளவிலான துறைமுகத்தை உருவாக்கி வருகிறார் சென்னை சத்யபாமா பல்கலைக்கழக வேந்தரான ஜேப்பியார்.
தமிழகத்தின் முதல் தனியார் துறைமுகம் இது என்பது குறிப்பிடத்தக்கது. ஜேப்பியார் மீன்பிடி துறைமுகம் முட்டம் பிரைவேட் லிமிட்டெட், சென்னை என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள புதிய நிறுவனம், இந்த துறைமுகத்ைத உருவாக்கி வருகிறது.
இதுகுறித்து ஜேப்பியார் கூறுகையில், கடந்த காலத்தில் முட்டம் மிகச் சிறந்த சுற்றுலா தலமாக இருந்தது. அந்த பெருமையை மீண்டும் கொண்டு வரும் வகையில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம். அதன் ஒரு கட்டம்தான் இந்த துறைமுகம்.
இந்தத் துறைமுகம் முற்றிலும் சூரிய சக்தியில் இயங்கும். வழக்கமான மின்சாரத்தை கொண்டு இது இயங்காது.
இந்தத் திட்டத்திற்காக மாநில அரசு 40 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியுள்ளது. திறந்த நிலை டெண்டர் மூலம் இந்த வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.
இந்த துறைமுகத்தில், சிறிய படகு கட்டும் தளம் மற்றும் ஊழியர்களுக்கான பள்ளி, கல்லூரிகள் ஆகியவையும் இடம் பெறும். இங்கு 600 மீன் பிடி படகுகளை நிறுத்த முடியும்.
சிறு ஹோட்டல்கள், மீன்களைப் பதப்படுத்தும் குளிர்சாதன வசதி, ஏல அறைகள், வலைகளை பழுதுபார்க்கும் ஷெட்டுகள், தொழிலாளர்கள் தங்கும் அறைகள் ஆகியவையும் இடம் பெறும்.
ரூ. 55 கோடி செலவில், 15 மாதங்களில் இந்த துறைமுகம் கட்டி முடிக்கப்படும் என்றார் ஜேப்பியார்.
முன்னாள் அதிமுக பிரமுகரான ஜேப்பியார் தற்போது கல்விப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இதுதவிர சிமென்ட், ஸ்டீல் உள்ளிட்ட தொழில்களிலும் ஈடுபட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.