ஒரு பள்ளி - 850 மாணவர்கள் - 41 மொழிகள்!
லண்டன்: கிழக்கு லண்டனில் உள்ள ஒரு பள்ளியில் 41 விதமான மொழிகளைப் பேசும் மாணவர்கள் படித்து வருகிறார்கள். உலகிலேயே அதிக மொழிகளைப் பேசும் மாணவர்கள் படிப்பது இங்கு மட்டும்தான் என்று கருதப்படுகிறது.
கிழக்கு லண்டனின், ரெட்பிரிட்ஜ் பகுதியில் உள்ள தி நியூபெரி பார்க் தொடக்கப் பள்ளிதான், இந்த சர்வ மொழி சாலையாகும். இங்கு மொத்தம் 851 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். 41 மொழிகளைப் பேசுகின்றனர்.
ஆப்ரிகன் முதல் ஹீப்ரு வரை, ஜப்பானிஸ் முதல் நார்வே மொழி வரை படு சரளமாக இந்த மாணவ, மாணவியர் பேசுகின்றனர். ஒவ்வொரு மாணாக்கருக்கும் குறைந்தது 2 அல்லது 3 மொழிகள் தெரிந்திருக்கின்றன.
இவர்களில் பெரும்பாலானவர்களின் தாய்மொழி ஆங்கிலம் அல்ல - மாறாக தமிழ். இவர்கள் அனைவருமே இலங்கைத் தமிழர்கள். புலம் பெயர்ந்து இங்கு வந்து வசிப்பவர்களின் குழந்தைகள் இவர்கள்.
மொத்தம் 250 தமிழ்க் குழந்தைகள் இங்கு படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் விசேஷம் என்னவென்றால் மாணவர்கள் எந்த மொழியைச் சேர்ந்தவர்களோ அந்த மொழியிலேயே அவர்கள் காலையில் வரவேற்கப்படுகிறார்கள். அதேபோல மாலையில் அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.
தாய்மொழியில் ஒருவரை வரவேற்கும்போது அது அவர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தையும் தங்களது கலாச்சாரத்தின் மீதான நினைவூட்டலாகவும் அமையும் என்கிறார் இப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வரும் ஜோ டெபோனோ.
தொடர்ந்து அவர் கூறுகையில், இந்தப் பள்ளியின் மொழி வேறு பாடு மிகவும் பெரிதாக இருந்தாலும், எந்தப் பிரச்சினையும் வந்ததில்லை. அவரவர் தாய் மொழியில் பேசிக் கொள்வதை நாங்கள் ஊக்குவிக்கிறோம்.
இந்தப் பள்ளியில் ஒவ்வொரு மாணவ, மாணவியும் தங்களது தாய் மொழியைத் தவிர வேறு சில மொழிகளையும் கற்றுக் கொள்ள வேண்டும். இதன் மூலம் தங்களது மொழி தவிர உலகின் பிற மொழிகளையும் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படுகிறது.
ஒவ்வொரு மாதமும், ஒரு மொழியின் மாதமாக நாங்கள் அனுசரிக்கிறோம். அந்த மாதத்தில் அந்த மொழிக்கு விசேஷ கவனம் கொடுக்கப்படும்.
எங்களது பள்ளியில் 6 முதல் 11 வயது வரையிலான குழந்தைகள் படிக்கிறார்கள் என்றார் டெபோனோ.