வருமான வரி வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் ஜெ. மனு வாபஸ்
கடந்த 1998-99ம் ஆண்டுக்கான வருமான வரிக் கணக்கை ஜெயலலிதா தாக்கல் செய்யவில்லை. இருப்பினும் இதுதொடர்பாக வருமான வரித்துறை சமரசத் தீர்வு மையத்தில் பின்னர் அவர் தாக்கல் செய்தார். இதை சமரசத் தீர்வு மையம் ஏற்றுக் கொண்டு உத்தரவு பிறப்பித்தது.
இதை எதிர்த்து வருமானவரித்துறை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா மீது வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், சமரசத் தீர்வு மையத்தின் உத்தரவை ரத்து செய்தது.
இதை எதிர்த்து ஜெயலலிதா சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதி கபாடியா தலைமையிலான பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வருமானம் குறித்த விவரங்களை வருமான வரித்துறையிடம்தான் தாக்கல் செய்ய வேண்டும். அதில் பிரச்சினை ஏற்பட்டால் அதன் பின்னரே சமரசத் தீர்வு மையத்தை நாட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து தங்களது மனுவை திரும்பப் பெறுவதாக ஜெயலலிதாவின் வழக்கறிஞர் தெரிவித்தார். இதற்கு நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.