தமிழகத்தில் இன்றும் நல்ல மழை - 2 நாட்களுக்கு நீடிக்கும்
வங்கக் கடலில், இலங்கைக்கு அருகே 2 நாட்களுக்கு முன்பு குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. அது நகராமல் அதே இடத்தில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக தமிழகம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்கள், வட கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இன்று 3வது நாளாக நல்ல மழை பெய்து வருகிறது. தலைநகர் சென்னையிலும், புறநகர்களிலும் காலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.
திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் மழை பெய்து வருகிறது.
கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் வீராணம் ஏரி நிரம்பியது. உபரி நீர் வெள்ளியங்கால் கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டு வருகிறது.
நெய்வேலியில் பெய்து வரும் மழை காரணமாக என்.எல்.சி. சுரங்கத்தில் தண்ணீர் தேங்கி நிலக்கரி வெட்டி எடுக்கும் பணி பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி ஆகிய பகுதிகளில் பெய்த மழையால் செங்கல் சூளைகளில் தண்ணீர் புகுந்து பல லட்சம் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியது.
நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும் மழை தொடர்கிறது. குற்றால அருவிகளில் தண்ணீர் வெள்ளம் போல கொட்டுவதால் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் மின்னல் தாக்கி ஒருவர் பலியானார்.
தற்போது பெய்து வரும் மழை மேலும் 2 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.