பிசுபிசுப்பு-விமான நிலைய ஊழியர்கள் ஸ்டிரைக் வாபஸ்
டெல்லி: கடந்த 2 நாட்களாக நடந்து வந்த விமான நிலைய ஊழியர்கள் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் தனியார் ஒத்துழைப்புடன் புதிய அதி நவீன விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன. இதையடுத்து தற்போது அங்குள்ள பழைய விமான நிலையங்களை மூட அரசு முடிவு செய்துள்ளது.
இதை எதிர்த்து இந்திய விமானநிலைய ஊழியர்கள் சம்மேளனம் சார்பில் நாடு முழுவதும் 2 நாட்களுக்கு முன்பு காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.
இதன் காரணமாக விமான போக்குவரத்தில் எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை. விமான நிலையங்களில் துப்புறவுப் பணிகள் மட்டுமே பாதிக்கப்பட்டன. இதனால் போராட்டம் பிசுபிசுத்தது.
இந் நிலையில் நேற்று மத்திய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேலுடன், ஊழியர் சங்கத்தின் பிரதிநிதிகள் பேச்சு நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படவே வேலைநிறுத்தப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக ஊழியர்கள் அறிவித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பிரபுல் படேல் பேசுகையில், பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு விட்டன. அவை இயங்கித்தான் ஆக வேண்டும்.
அதேசமயம், சட்டத்திற்கு உட்பட்டு, ஊழியர்களின் நலன் பாதிக்காமல் பார்த்துக் கொள்ளப்படும். பழைய விமான நிலையங்களை மூடாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் படேல்.
ஹைதராபாத் விமான நிலையம் இன்று திறப்பு:
இதற்கிடையே, புதிதாக, அதி நவீனமாக, தனியார் ஒத்துழைப்புடன் (பப்ளிக், பிரைவேட் - பிபிபி மாடல்) கட்டப்பட்டுள்ள விமான நிலையம் இன்று திறக்கப்படுகிறது.
இந்த விமான நிலையத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார். ஆந்திர மாநில முதல்வர் ராஜசேகர் ரெட்டி உள்ளிட்டோர் இதில் கலந்து கொள்கின்றனர்.
அதேசமயம், பெங்களூர் விமான நிலையத் திறப்பும் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் அது ஒத்திவைக்கப்பட்டு விட்டது.