நாடாளுமன்ற விதியை மீறி விட்டார் ராகுல்-பாஜக புகார்
டெல்லி: நாடாளுமன்றத்தில் எழுதி வைத்துப் பேசி, நாடாளுமன்ற விதிமுறையை ராகுல் காந்தி மீறியுள்ளதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக செய்தித் தொடர்பாள் வி.கே.மல்ஹோத்ரா கூறுகையில், முதன் முதலில் லோக்சபாவில் பேசும் உறுப்பினர்கள் மட்டுமே எழுதி வைத்துப் பேசலாம். அல்லது அமைச்சர்கள் எழுதி வைத்துக் கொண்டு பேசலாம்.
இது நாடாளுமன்றத்தின் அடிப்படை விதி. ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி விவகாரத்தில் இது காற்றில் பறக்க விடப்பட்டுள்ளது.
பிரதமர் பதவிக்காக காத்திருக்கும் ஒருவருக்கு, குறைந்தபட்சம் அவையின் அடிப்படை விதிகள் நன்றாக தெரிந்திருக்க வேண்டும். அல்லது தெரிந்து கொள்ள முயல வேண்டும் என்றார் மல்ஹோத்ரா.
பாஜகவின் பிரதமர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு, சந்தேகமே இல்லாமல், எல்.கே.அத்வானிதான் எங்களது பிரதமர் வேட்பாளர். இது இயற்கையான தேர்வு. ஆனால் காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை பிரதமராக்க மறைமுகமாக முயற்சிகள் நடக்கிறது என்றார் மல்ஹோத்ரா
தொடர்ந்து ராகுல் காந்தி குறித்து மல்ஹோத்ரா கூறுகையில், ராகுல்காந்தியின் பேச்சில், விலைவாசி உயர்வு குறித்து ஒரு வார்த்தை கூட இல்லை. நாட்டில் விலைவாசி உயர்வு மிக மோசமான நிலையை எட்டியுள்ளது.
அபாயகரமான அளவுக்கு விலைவாசி சென்றுள்ள நிலையில் அதுகுறித்து ராகுல் காந்தி கவலைப்பட்டது போலவேத் தெரியவில்லை.
பட்ஜெட்டுக்குப் பிறகு விலைவாசி மேலும் அதிகரித்து விட்டது என்றார் மல்ஹோத்ரா.