காங். எம்.எல்.ஏ மீது ரூ. 8.25 லட்சம் மோசடிப் புகார்
கோவை: வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் ரூ.8.25 லட்சம் அளவு பணம் வாங்கி மோசடி செய்து விட்டதாக ஊட்டி கங்கிரஸ் எம்.எல்.ஏ. கோபாலன் மீது புகார் எழுந்துள்ளது.
ஊட்டி எம்.எல்.ஏ.- வாக இருப்பவர் கோபாலன். இவர் நீலகிரி மாவட்ட காங்கிரஸ் தலைவராகவும் உள்ளார்.
இவர் மீது காங்கிரஸ் செயலாளர் உமா நடராஜன் மற்றும் 27 பேர் கையழுத்திட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. வித்யா குல்கர்னியிடம் புகார் கொடுத்துள்ளனர்.
அந்த புகார் மனுவில், "அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ஊட்டி எம்.எல்.ஏ. கோபாலன் எங்களிடம் ரூ 8 லட்சத்து 25 ஆயிரம் பணத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாங்கிக் கொண்டார்.
ஆனால் சொன்னபடி வேலை வாங்கித் தரவில்லை. இது குறித்து கேட்டால் ஆள் வைத்து மிரட்டுகிறார். எனவே அவரால் எங்கள் உயிருக்கு ஆபத்து வருமோ என பயமாக உள்ளது.
எங்களை ஏமாற்றி பணத்தை வாங்கிக்கொண்ட எம்.எல்.ஏ.விடம் இருந்து பணத்தை மீட்டு தருவதோடு எங்களது உயிருக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
இந்த புகார் மனு மீது உடனடி விசாரணை நடத்த எஸ்.பி. வித்யா குல்கர்னி உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இந்த சம்பவத்திற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என ஊட்டி எம்.எல்.ஏ. கோபாலன் மறுத்துள்ளார்.