யு.எஸ். விசா மோசடி: குஜராத் பெண் சிக்கினார்
சென்னை: போலி ஆவணங்களைக் கொடுத்து அமெரிக்க விசா பெற முயன்ற குஜராத்தைச் சேர்ந்த பெண்ணை போலீஸார் கைது செய்துள்ளனர்.
போலியான ஆவணங்களைக் காட்டி அமெரிக்க விசா பெற முயன்றதாக நடிகை புளோரா உள்ளிட்ட 3 பேர் சமீபத்தில் கைது செய்யப்பட்டனர். இதுபோன்ற முறைகேட்டில் தென்னிந்தியத் திரையுலகினர் ஈடுபட்டுள்ளதாகவும், திரையுலகைச் சேர்ந்த 200 பேர் நிரந்தரமாக அமெரிக்கா செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க துணைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று இன்னொரு பெண் விசா மோசடியில் சிக்கியுள்ளார்.
குஜராத்தைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ஜெயஸ்ரீபடேல் (28). இவருக்கு அமெரிக்காவில் வீட்டு வேலைக்காரப் பெண்ணாக பணியாற்றும் வாய்ப்பு வந்தது. இதற்காக விசா எடுக்க ஒரு புரோக்கரை அணுகியுள்ளார். அவரிடம் விசா பெற்றுத் தருவதற்காக ரூ. 50 ஆயிரம் பணமும் கொடுத்துள்ளார். அந்த புரோக்கர் சில ஆவணங்களை ஜெயஸ்ரீயிடம் கொடுத்துள்ளார்.
இந்த ஆவணங்களை ஜெயஸ்ரீ துணைத் தூதரகத்தில் தாக்கல் செய்தார். இவற்றைப் பரிசோதித்தபோது போலியான ஆவணங்கள் எனத் தெரிய வந்தது. மேலும் ஜெயஸ்ரீ தாக்கல் செய்த பாஸ்போர்ட்டும் போலியானது எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை போலீஸாரிடம் துணைத் தூதரக அதிகாரிகள் ஒப்படைத்தனர். போலீஸார், ஜெயஸ்ரீ படேலைக் கைது செய்தனர்.