கன மழையால் குற்றால அருவியில் திடீர் வெள்ளம்
தென்காசி: குற்றாலம் வனப்பகுதியில் நேற்று மாலை முதல் பெய்த பலத்த மழையால் மெயின் அருவியில் கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில், நடைப்பாதையி்ல் அமைக்கப்பட்டிருந்த போலீஸ் கண்காணிப்பு கோபுரம், பெண்கள் உடை மாற்றும் அறை மற்றும் தடுப்புகள் ஆகியவை இந்த திடீர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன.
வங்க கடலின் தென்மேற்கு பகுதியில் தமிழகம் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் குறைந்த காற்றழுந்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுசேரி பகுதிகளில் கடந்த சில நாட்களாக பரவலாக கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக தென் மாவட்டங்களில் மழை கொட்டுகிறது.
குற்றாலம் வனப் பகுதியிலும் கடந்த 2 தினங்களாக கன மழை பெய்து வருகிறது. நேற்று காலை முதல் மெயின் அருவி. ஐந்தருவியில் தண்ணீர் வரத்து சற்று அதிகரித்திருந்தது. இந்நிலையில் நேற்று மீண்டும் பலத்த மழை கொட்டியது.
இரவு வரை அடை மழை நீடித்ததால் மெயினருவியில் கடும் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. பாதுகாப்பு வளைவு தாண்டி தாடகம் மற்றும் நடைபாதையின் மீது நேரடியாக வெள்ளம் கொட்டியது. இதில் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீஸ் கோபுரம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது.
மெயினருவியில் பெண்கள் குளிக்க செல்லும் பாதையில் அமைக்கப்பட்டிருந்த தடுப்பு பாதை தடுப்புகள் மற்றும் தற்காலிக உடை மாற்றும் அறையும் அடித்து செல்லப்பட்டது. பெண்கள் நடந்து செல்லும் பாதையில் காங்கீரிட் தரைதளம் வெள்ளத்தால் கடும் சேதமடைந்தது.
நெல்லையில் விடிய விடிய மழை-ஒருவர் பலி:
நெல்லை மாவட்டத்தில் விடிய விடிய மழை கொட்டியது. மின்னல் தாக்கி விவசாயி ஒருவர் பலியானார்.
வாசுதேவநல்லூர் பகுதியில் நேற்று மாலை இடியுடன் பலத்த மழை கொட்டியது. அப்போது வயலில் வேலை செய்துக் கொண்டிருந்த வாசுதேவநல்லூரை சேர்ந்த விவசாயி ராமசாமி மின்னல் தாக்கி பரிதாபமாக பலியானார்.