கடைசி வழக்கிலும் சர்தாரி விடுதலை
இஸ்லாமாபாத்: ஆசிப் அலி சர்தாரி பிரதமர் பதவிக்கு வர தடையாக இருந்த கடைசி ஊழல் வழக்கிலும் அவர் விடுவிக்கப்பட்டார். இதன் மூலம் அவர் இருந்த அனைத்து ஊழல் வழக்குகளும் ரத்து செய்யப்பட்டு விட்டன.
பெனாசிர் பூட்டோவின் கணவரும், பாகிஸ்தான் மக்கள் கட்சியின் இணைத் தலைவருமான ஆசிப் அலி சர்தாரி மீது பல்வேறு ஊழல் வழக்குகள் இருந்தன.
சர்தாரியுடன் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஊழல் வழக்குகளை திரும்பப் பெற அதிபர் முஷாரப் உத்தரவிட்டார்.
இதையடுத்து இந்த மாத தொடக்கத்தில் ராவல்பிண்டியில் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வந்த 6 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டன.
7வது வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்படும் என ராவல் பிண்டி நீதிமன்ற நீதிபதி சாகீர் குவாத்ரி அறிவித்திருந்தார். அதன்படி இந்த வழக்கில் இன்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
2004ம் ஆண்டு, பிஎம்டபிள்யூ காரை இறக்குமதி செய்ததில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கு இது. இன்று இவ்வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குவாத்ரி, சர்தாரி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டார்.
இதன் மூலம் அனைத்து வழக்குகளிலிருந்தும் சர்தாரி விடுவிக்கப்பட்டு விட்டார். இதன் மூலம் அவர் பிரதமர் பதவிக்கு வருவதற்கு இருந்த அனைத்துத் தடைகளும் நீங்கி விட்டன. இதையடுத்து சர்தாரி இடைத் தேர்தலில் போட்டியிட்டு பிரதமர் பதவிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.