விஜய்காந்த்-திருமா ஆதரவுக்கு அலைந்த அதிமுக
இந்தத் தேர்தலில் திமுக சார்பில் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் டி.கே. ரெங்கராஜன் ஆகியோர் போட்டியிட்டனர். தலைகீழாக நின்று பார்த்தும் பாமகவுக்கு இடம் தரப்படவில்லை.
அதிமுக சார்பில் பாலகங்கா போட்டியிட்டார்.
அதிமுக கூட்டணி இன்னொரு இடத்தை வெல்லவோ அல்லது திமுக கூட்டணியின் 5வது வேட்பாளருக்கு இணையான வாக்கு பெறவோ வேண்டுமானால் விஜய்காந்தின் ஆதரவு தேவையாய் இருந்தது.
இந்த இடத்தைத் தான் மதிமுகவுக்கு ஒதுக்கி அக் கட்சியின் தலைவர் வைகோவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தினார் ஜெயலலிதா. ஆனால், தோல்வி உறுதி என்பதால் கோதாவில் இறங்க மறுத்துவிட்டார் வைகோ.
வைகோவின் இந்த முடிவு ஜெயலலிதாவுக்கு எரிச்சலையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இதனால் அதிமுகவே 2வது வேட்பாளர் நிறுத்தும் என்று கூறப்பட்டது.
தேசிய லீக் ஆர்வம்:
மேலும் மதிமுக வேண்டாம் என்று கூறிய இடத்தில் அதிமுக கூட்டணியில் உள்ள இன்னொரு கட்சியான தேசிய லீக் போட்டியிட விருப்பம் தெரிவித்தது. அந்த கட்சியை சேர்ந்த பசீர்அகமதுவை வேட்பாளராக நிறுத்த திட்டமிடப்பட்டது.
இது குறித்து அவர்கள் ஜெயலலிதாவுடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது.
பதில் சொல்லாமல் அனுப்பிய விஜய்காந்த்:
இதைத் தொடர்ந்து விஜயகாந்த்தின் ஓட்டு கிடைத்தால் முதல் சுற்றில் வெல்லலாம் என்று நினைத்த தேசிய லீக் கட்சியின் பிரமுகர்கள் விஜயகாந்தை சந்தித்து அவரது ஆதரவை கேட்க சென்றனர். ஆனால், அவர்களிடம் விஜய்காந்த் எந்த பதிலும் சொல்லாமல் திருப்பி அனுப்பிவி்ட்டார்.
திருமாவுக்கு அதிமுக தூது:
இதற்கிடையே முன்பு தங்கள் கூட்டணியில் இருந்த திருமாளவளவனை அதிமுக தரப்பில் இருந்து ஜெயலலிதாவின் தூதரர்கள் சிலர் சந்தித்து, தங்களது இரண்டாவது வேட்பாளருக்கு ஆதரவு கேட்டுள்ளனர். ஆனால், அதிமுகவின் கோரிக்கையை நிராகரித்துவிட்டார் திருமாவளவன்.
ஜின்னா, வசந்தி ஆகிய இருவரும் சிறுபான்மையினர். இதனால் அவர்களையே ஆதரிப்பேன். என்னையும் மதித்து விவாதித்த பிறகே அவர்களை போட்டியில் நிறுத்தினார் முதல்வர் கருணாநிதி. இதனால், திமுகவுக்கே எங்கள் ஓட்டு என்று கூறிவிட்டார் திருமா.
மேலும் அதிமுக கூட்டணிக்கு திரும்ப வருமாறு விடுக்கப்பட்ட அழைப்பையும் திருமா நிராகரித்துவிட்டார்.
திருமாவளவனிடம் 2 எம்எல்ஏக்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது. இவர்களது ஆதரவு கிடைத்திருந்தால் அதிமுகவால் இரண்டாவது இடத்தை நிச்சயம் வெல்ல முடிந்திருக்கும்.
ரெங்கராஜனுக்கு சுயேச்சை ஆதரவு:
அதிமுக இரண்டாவது வேட்பாளரை நிறுத்தியிருந்தால், அவரும் மார்க்சிஸ்ட் வேட்பாளர் ரெங்கராஜனும் தலா 32 ஓட்டுகளுடன் சம பலத்தில் இருந்திருப்பர்.
ஆனால், தளி தொகுதியில் மார்க்சிஸ்ட் அதிருப்தி வேட்பாளராக போட்டியிட்டு வென்றுள்ள சுயேச்சையின் ஆதரவு ரெங்கராஜனுக்கே கிடைக்கும் என்பதால் அவரே வெல்வார் என்ற நிலைமை இருந்தது.
முக்கியமான விஜய்காந்த் ஓட்டு:
ஆனால், இந்த கட்டத்தில் விஜயகாந்தின் ஓட்டு முக்கியமானது. அதிமுக இரண்டாவது வேட்பாளரை நிறுத்தி, அவருக்கு விஜய்காந்த் வாக்களித்தால் மீண்டும் சம பலப் போட்டி ஏற்பட்டிருக்கும்.
திமுக கூட்டணியின் 5வது வேட்பாளரை எளிதில் வெல்ல முடியாமல் செய்திருக்க முடியும்.
ஆனால், அதிமுகவை ஆதரிக்கும் முடிவில் விஜய்காந்த் இல்லை என்று தெரிய வந்ததால் இரண்டாவது வேட்பாளரை நிறுத்தும் திட்டத்தை அதிமுக கடைசி கட்டத்தில் வாபஸ் பெற்றுவிட்டது என்கின்றனர்.
இந் நிலையில் வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நேரமான இன்று மாலை 3 மணி வரை அதிமுக கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவியது.
இதனால் கடைசி நிமிடம் வரை பெரும் பரபரப்பு நிலவியது. ஆனால், அதிமுக ஒதுங்கிக் கொண்டதால் போட்டியிட்ட 6 பேரும் வெல்லும் நிலை உருவானது.