ராஜ்யசபா: 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வாகிறார்கள்
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் 26ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இத் தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் திமுக 2 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், சிபிஎம் ஒரு இடத்திலும் போட்டியிடுகின்றன. அதிமுக ஒரு இடத்தில் போட்டியிடுகிறது.
திமுக சார்பில் அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி, காங்கிரஸ் சார்பில் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.கே.ரங்கராஜன், அதிமுக சார்பில் பாலகங்கா ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதிமுக 2 இடங்களில் போட்டியிடும், ஒரு இடத்தில் மதிமுக போட்டியிடும் என முதலில் ஜெயலலிதா அறிவித்திருந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் மதிமுக போட்டியிட மறுத்து விட்டது.
இருப்பினும் திட்டமிட்டபடி இன்னொரு வேட்பாளரை ஜெயலலிதா நிறுத்தலாம் என எதிர்பார்க்கப்பட்டது. இதனால் தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெறக் கூடிய சூழ்நிலை இருந்தது.
ஆனால் இன்று மாலை 3 மணியுடன் வேட்பு மனு தாக்கல் முடிந்தபோது 6 பேர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்தனர். அதிமுக சார்பில் வேறு யாரும் போட்டியிடவில்லை.
சுயேச்சையாக டாக்டர் பத்மராஜன் என்பவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஆனால் அவரது மனு உரிய முறையில் இல்லை என்பதால் அது வேட்பு மனு பரிசீலனையின்போது தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.
எனவே வருகிற 19ம் தேதி 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக முறைப்படி அறிவிக்கப்படுவார்கள்.
4வது முறையாக எம்.பி. ஆகும் ஜெயந்தி:
6 வேட்பாளர்களில் ஒருவரான காங்கிரஸ் கட்சியின் ஜெயந்தி நடராஜன் 4வது முறையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகிறார். ஜி.கே.வாசன் 2வது முறையாக போட்டியிடுகிறார்.
ஜி.கே.வாசனுக்கு எளிதாக சீட் கிடைத்து விட்டது. ஆனால் ஜெயந்தி நடராஜன் கடும் போட்டிக்கு மத்தியில் சோனியாவிடம் தனக்கு உள்ள நேரடி நெருக்கத்தைப் பயன்படுத்தி சீட் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திமுக சார்பில் போட்டியிடும் வசந்தி ஸ்டான்லியும், ஜின்னாவும் முதல் முறையாக ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
அதிமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பாலகங்கா, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் தயாநிதி மாறனை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியுற்றவர். அதேபோல மு.க.ஸ்டாலின் சென்னை மேயர் பதவிக்குப் போட்டியிட்டபோது அவரை எதிர்த்து நின்று தோல்வியைத் தழுவியவர்.
இப்படி இரு பெரும் தலைகளை எதிர்த்து நின்றவர் என்ற வகையிலும், ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்பதாலும் அவருக்கு இப்போது ராஜ்யசபா உறுப்பினர் பதவியை பரிசாகக் கொடுத்துள்ளார் ஜெயலலிதா.