அணு ஒப்பந்தம்: இன்று காங். கூட்டணி-இடதுசாரிகள் முக்கிய ஆலோசனை
டெல்லி: இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணுசக்தி கழகத்துடனும் இந்தியா செய்து கொண்ட பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து ஐக்கிய முற்போக்கு கூட்டணி-இடதுசாரி கட்சிகளின் உயர்மட்ட ஒருங்கிணைப்புக் குழு இன்று கூடி விவாதிக்கிறது.
இந்தியா-அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்துக்கு, மத்திய அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்துவரும் இடதுசாரி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் என்ற இடதுசாரிகளின் எச்சரிக்கையையும் மீறி அமெரிக்கா, சர்வதேச அணு சக்திக் கழகத்துடன் மத்திய அரசு பேச்சு நடத்தியது.
இதையடுத்து ஆதவை வாபஸ் பெறப் போவதாக இடதுசாரிகள் அறிவித்ததால், வெளியறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் அரசியல் உயர்மட்ட குழு அமைக்கப்பட்டது.
15 உறுப்பினர் கொண்ட இந்தக் குழுவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் இடதுசாரிக் கட்சி தலைவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
இதற்கிடையே இடதுசாரிகளின் எதிர்ப்பையும் மீறி அமெரிக்காவுடனும் சர்வதேச அணுசக்தி கழகத்துடனும் தொடர்ந்து இந்தியா பேச்சு நடத்தியது. இந்த ஒப்பந்தம் தொடர்பான பாதுகாப்பு விதிமுறைகள் குறித்த வரைவு நகலைக் கூட மத்திய அரசு தயாரித்துவிட்டது. ஆனாலும் இடதுசாரிகளுக்கு பயந்து அதை இன்னும் வெளியிடவில்லை.
இந் நிலையில் வரும் மே மாதத்திற்குள் அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற வேண்டும் என்று அமெரிக்கா கெடு விதித்துள்ளது. ஆனால், நிறைவேற்றக் கூடாது என இடதுசாரிகள் திட்டவட்டமாகக் கூறி வருகின்றனர்.
இதனால் ஒப்பந்த விஷயத்தில் அமெரிக்கா-இடதுசாரிகளிடம் மாட்டிக் கொண்டு மத்திய அரசு விழிக்கிறது.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-இடதுசாரிகளின் அரசியல் ஒருங்கிணைப்புக் குழுவின் உயர்மட்டக் கூட்டம் டெல்லியில் இன்று கூடுகிறது.
இதில், சர்வதேச அணுசக்தி கழகத்துடன் பாதுகாப்பு விதிமுறைகள் குறித்து செய்து கொண்ட ஒப்பந்தம் குறித்த வரைவு நகலை இடதுசாரி கட்சி தலைவர்களிடம் மத்திய அரசு வழங்கும் என்று தெரிகிறது.
இந் நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி கூறுகையில், இந்த ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையிலேயே மத்திய அரசு செயல்பட வேண்டும். அணுசக்தி ஒப்பந்தம் தவறானது என்று உயர்மட்ட குழு கருதினால், மறு நிமிடமே அந்த ஒப்பந்தத்தை கைவிட வேண்டும்' என்றார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் பிரகாஷ் காரத் கூறுகையில், மத்திய அரசு, தனது முழு பதவி காலத்தையும் பூர்த்தி செய்ய முடியும். இடையிலேயே இந்த அரசு கவிழ்ந்து போனால் அதற்கு இடதுசாரிகள் பொறுப்பாக மாட்டார்கள். மத்திய அரசுதான் பொறுப்பாகும் என்றார் எச்சரிக்கையுடன்.