வருகிறது புதிய வாக்காளர் அடையாள அட்டை
மதுரை: வங்கி ஏடிஎம் கார்டுகளின் அளவில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை உருவாக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மதுரையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா இதைத் தெரிவித்தார்.
தொகுதிள் மறு சீரமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள புதிய தொகுதிகள் குறித்து 7 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் நரேஷ் குப்தா ஆலோசனை நடத்தினார். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், ஏடிஎம் கார்டு அளவில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை உருவாக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இந்தப் புதிய அடையாள அட்டையில், வாக்காளர்களின் பிறந்த தேதி இடம் பெற்றிருக்கும். இந்தப் புதிய வகை கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் ரூ. 15 செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
திருத்தி அமைக்கப்பட்ட தொகுதிகளுக்கான வாக்காளர் பதிவு மையம், புதிய வாக்காளர் பட்டியல், வாக்குச் சாவடிகள் குறித்த பணிகள் ஜூன் 21ம் தேதிக்குள் முடிவடைந்து விடும்.
தமிழகத்தை ஐந்து மண்டலங்களாக பிரிக்கவுள்ளோம். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ஒரு பார்வையாளர் நியமிக்கப்படுவார். புதிய வாக்குச் சாவடிகள் நியமனம் மற்றும் பதட்டம் நிறைந்த வாக்குச் சாவடிகளை அடையாளம் காண்பது ஆகிய பணிகளில் இந்த பார்வையாளர்கள் ஈடுபடுவார்கள் என்றார் குப்தா.