பி.டி.உஷா சர்வதேச வீராங்கனை அல்ல: அஞ்சு பாபி ஜார்ஜ்
கொச்சி: பி.டி.உஷா ஒன்றும் சர்வதேச தரத்திலான வீராங்கனை அல்ல. அவரும், மில்காசிங்கும் ஆசிய அளவிலான தரம் கொண்டவர்களாகவே விளங்கினர். உஷாவை எனது முன் மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியாது என்று தடகள வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கேரளாவைச் சேர்ந்தவர் அஞ்சு பாபி ஜார்ஜ். இருப்பினும் கேரள அரசு அவரை சரிவர கண்டு கொள்ளாததால் சென்னைக்கு இடம் பெயர்ந்து தமிழக வீராங்கனையாக நீளம் தாண்டும் போட்டிகளில் பங்கேற்று வருகிறார்.
இந்த நிலையில் பய்யோலி எக்ஸ்பிரஸ் என செல்லமாக வர்ணிக்கப்பட்ட, இந்தியாவுக்கு சர்வதேச அளவில் தடகளத்தில் பெயர் வாங்கிக் கொடுத்த, ஒலிம்பிக் போட்டியில் இந்திய அளவில் சாதனை படைத்தவரான பி.டி.உஷா மீது பாய்ந்துள்ளார் அஞ்சு.
சமீபத்தில் மலையாள மனோரமா டிவிக்கு அவர் அளித்த பேட்டியில், பி.டி.உஷாவும், மில்கா சிங்கும் சர்வதேச தரத்திலான வீரர்கள் அல்ல. ஆசிய அளவிலான வீரர்களாகவே அவர்களது காலத்தில் திகழ்ந்தனர்.
முன்னணி வீராங்கனைகள் பங்கு பெறாத காரணத்தால்தான், 1984ம் ஆண்டு லாஸ் ஏஞ்சலெஸில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் பி.டி.உஷா, 4வது இடத்தைப் பிடிக்க முடிந்தது. இல்லாவிட்டால் அவருக்கு அந்த இடம் கூட கிடைத்திருக்காது.
உலகத் தரத்திலான வீராங்கனையாக விளங்காத உஷாவை எப்படி எனது முன்மாதிரியாக எடுத்துக் கொள்ள முடியும். உலகத் தரத்திலான வீராங்கனைகள், வீரர்களைத்தான் முன்னுதாரணமாக கொள்ள முடியும் என்று கூறியுள்ளார் அஞ்சு.
அஞ்சுவின் இந்தப் பேச்சு விளையாட்டு உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சு ஒரு சிறுமி - உஷா:
அஞ்சுவின் பேச்சு குறித்து பி.டி.உஷாவிடம் கேட்டபோது, அவர் ஒரு சிறுமி. என் கண் முன்பாக வளர்ந்து வீராங்கனையாக உருவெடுத்தவர். இன்னும் வளர வேண்டியவர்.
பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்காக தயாராகிக் கொண்டிருக்கிறார் அஞ்சு. அவரிடமிருந்து ஒரு பதக்கத்தை இந்திய மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இப்போது நான் அவரது பேச்சுக்கு கருத்து கூற விரும்பவில்லை. அது அவரது தயார் நிலையைப் பாதிக்கும். மனதைப் பாதிக்கும்.
அஞ்சு எப்படி எனது தரத்தை நிர்ணயிக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை. சர்வதேச அமெச்சூர் தடகள சம்மேளனம்தான் 1985ம் ஆண்டிலும், 1986ம் ஆண்டிலும் என்னை சர்வதேச அளவிலான 8 சிறந்த வீராங்கனைகளில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது என்பதை அஞ்சுவுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் உஷா.