தமிழக அரசின் 150 இலவச டிவி பெட்டிகள் தீயில் எரிந்து சாம்பல்
திருவாரூர்: பொதுமக்களுக்கு வழங்குவதற்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த 150 இலவச வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் எரிந்து சாம்பலாயின. இது சதிச் செயலாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஊராட்சி ஒன்றியம், பரவக்கரை ஊராட்சியைச் சேர்ந்த பயனாளிகளுக்கு வழங்குவதற்காக 424 வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தன.
வரும் சனிக்கிழமை இந்த டிவிகளை அமைச்சர் மதிவாணன் வழங்குவதாக இருந்தது. இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் திடீரென கிராம நிர்வாக அலுவலகத்திலிருந்து கரும்புகை வெளிவந்தது. அக்கம்பக்கத்தினர் விரைந்து சென்று பார்த்தனர். ஆனால் ஜன்னல் அனைத்தும் மூடப்பட்டிருந்ததால் உள்ளே என்ன நடக்கிறது என்று தெரியவில்லை.
இந்த நிலையில் தீ மளமளவென பரவியது. இதையடுத்து தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்தனர். சில மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீவிபத்தில் அறையில் இருந்த டிவிகளில் 150 பெட்டிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகி விட்டன.
இது சதிச் செயலாக இருக்கும் எனக் கருதப்படுகிறது. அதேசமயம், மின்கசிவால் தீவிபத்து ஏற்பட்டதா என்பது குறித்தும் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.