செஸ் ஆனந்துக்கு விளையாட்டு பல்கலை. டாக்டர் பட்டம்
சென்னை: உலக செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்துக்கு தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னை கவர்னர் மாளிகையில் உள்ள தர்பார் ஹாலில் நடந்தது. விழாவுக்கு பல்கலைக்கழக வேந்தரும், கவர்னருமான சுர்ஜீத் சிங் பர்னாலா தலைமை தாங்கினார்.
உலக செஸ் சாம்பியன் ஆனந்தின் சாதனைகளைப் பாராட்டி அவருக்கு விளையாட்டு பல்கலைக்கழகம் சார்பில் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.
செஸ் போட்டியில் கலந்துகொள்வதற்காக வெளிநாடு சென்றிருப்பதால் ஆனந்துக்குப் பதிலாக அவரது பெற்றோர் விஸ்வநாதன்-சுசீலா பட்டத்தை பெற்றுக்கொண்டனர்.
இந்த விழாவில் பல்கலைக்கழக இணைவேந்தரும், தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருமான கே.பொன்முடி கலந்துகொண்டு மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார்.
மொத்தம் 503 பேர் பட்டம் பெற்றனர். பல்கலைக்கழக அளவில் பி.பி.எட். படிப்பில் முதலிடம் பெற்ற மாணவி முத்துலட்சுமிக்கும், எம்.பில். படிப்பில் முதலிடத்தைப் பிடித்த மாணவி சங்கீதாவுக்கும் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, அமைச்சர் பொன்முடி பட்டமளிப்புவிழா உரை நிகழ்த்தினார். அவர் பேசுகையில்,
உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற விஸ்வநாதன் ஆனந்திற்கு ரூ.25 லட்சத்தை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
125 ஏக்கர் பரப்பில் விளையாட்டு பல்கலைக்கழகத்தை அமைக்க தமிழக அரசு 3.5 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது என்றார்.
சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே மேலகோட்டையூர் கிராமத்தில் இந்த விளையாட்டு பல்கலைக்கழகம் அமைவது குறிப்பிடத்தக்கது.